விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகளில் அதன் உரிமையாளர்கள் 1960 பேருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அவற்றை மீளளித்துள்ளார்.
அதேவேளை, சுமார் மூன்றரை இலட்சம் பேர் மீளக் குடியேற்றப்படாமல் அவர்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் தங்கத்தை கையளித்தால் மட்டும் போதாது அந்த அப்பாவி மக்களின் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளையும் மீளளிக்க வேண்டும். தங்கத்தை விட வும் பெறுமதியானது அவர்களின் பூர்வீக நிலங்கள் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வாரப்பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
அப்பத்திரிகையில் மேலும் தெரிக்கப்பட்டுள்ளதாவது,
சொத்துக்களை இழந்த மக்கள் சொல்லொணாத் துயரங்களோடு வாழ்கின்றனர். போர் முடிந்து 5 வருடங்கள் முடிந்த நிலையிலேயே இந்த நகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை காலம் இவை எங்கு வைக்கப்பட்டிருந்தன என்று தெரியவில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது இடம்பெற்ற பிரசாரத்தின் போது, அரசாங்கத்திடம் புலிகளின் 200 கிலோ தங்க நகைகளும் புலிகளின் கோடிக்கணக்கான வெளிநாட்டு கரன்ஸி நோட்டுக்களும் அரசிடம் கையளிக்கப்பட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பகிரங்கமாகக் கூறிவந்தார். அவ்வாறானால், அவற்றுக்கு என்ன நடந்தது? அவற்றின் உண்மையான பெறுமதி என்ன? என்பதைப் பகிரங்கமாக அரசு கூற வேண்டும்.
அதேவேளை, நகைகளை ஜனாதிபதியா? நீதிமன்றமா? கையளிப்பது என்ற கேள்வியும் இத்தருணததில் எழவே செய்கின்றது.
எவ்வாறெனினும், வட பகுதி மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் அவர்களின் ஆக்கிரமிக்கப்பட்ட பூர்வீக நிலங்களை மீளக் கையளிக்க வேண்டும். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த 3 இலட்சம் மக்கள் தொடர்ந்தும் அகதிகளாகவுள்ளனர். இவர்களில் இரண்டு இலட்சம் பேர் இந்தியா உட்படப் பல்வேறு இடங்களிலும் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். ஏனைய ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் உள்நாட்டிலும் உள்ளனர்.
இவர்களது காணிகள் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் மீளக் குடியேற முடியாத நிலையில் காணப்படுகின்றனர். கடந்த 20 தொடக்கம் 30 வருட காலமாக அகதி வாழ்க்கையே தொடர்ந்து வருகின்றது.
தமது பூர்வீக விளை நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் அவர்கள் மிகுந்த கஷ்டங்களுக்கும் மன அழுத்தங்களுக்கும் ஆளாகியுள்ளனர். தங்க நகைகளை விடவும் மிகவும் பெறுமதிமிக்கது அவர்களின் விளை நிலங்களாகும். அந்தவகையில், தமது விளை நிலங்கள் மீளக் கையளிக்கப்பட வேண்டுமெனக் கூறி குறித்த மக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இது குறித்து அரசாங்கம் கவனத்தில் கொள்வதாக இல்லை. அதியுயர் பாதுகாப்பு வலயம் காரணமாக சுவீகரிக்கப்பட்ட தமது காணிகள் மீளக் கிடைக்குமென சுமார் 20 தொடக்கம் 30 வருடங்களாக ஏங்கிய நிலையில் பலர் தமது வயோதிபத்தையும் எட்டிவிட்டனர். எனவே, இந்த நிலையிலாவது அவர்களின் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை மீள வழங்க வேண்டும்.
அதேவேளை, காணாமல் போனவர்கள் மற்றும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் அவர்களின் உற்றார் உறவினர்கள் சதா கண்ணீர் வடித்தவர்களாக உள்ளனர். எனவே அரசாங்கம் அது தொடர்பில் சிந்திக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளர் என அப்பத்திரிகை தெரிவத்துள்ளது.
















