பிரபல சாமியார் கல்கியின் ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரிச்சோதனையில் ரூ.44 கோடி பறிமுதல்!

பிரபல சாமியார் கல்கியின் வீடு, ஆசிரமம், ஆன்மீகப் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத 44 கோடி ரூபாய் ரொக்கம், அமெரிக்க கரன்சி, வைரம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 500 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே வரதய்யபாளையத்தில் அமைந்துள்ளது கல்கி ஆசிரமம். இதன் நிறுவனர் விஜயகுமார், தன்னை கல்கி அவதாரம் என அறிவித்துக் கொண்டு ஆசிரமங்கள், ஆன்மிகப் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார். இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கிளைபரப்பியுள்ள கல்கி ஆசிரமம், ரியல் எஸ்டேட், கட்டுமானம், விளையாட்டுத்துறைகளிலும் கால்பதித்துள்ளது. கல்கி அவதாரம் என அறிவித்துக் கொண்ட விஜயகுமார் மற்றும் அவரது மகன் கிருஷ்ணாவினால் “வெல்னஸ் குரூப்” என்ற பெயரில் நிர்வகிக்கப்படும் இந்த குழுமம் வரி ஏய்ப்பு செய்வதாக, வருமான வரித்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளன.

அதன் அடிப்படையில், ஆந்திராவில் வரதய்யபாளையம், தெலுங்கானாவில் ஹைதரபாத், கர்நாடகத்தில் பெங்களூர், தமிழ்நாட்டில் சென்னை என கல்கி ஆசிரமம் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். ஆன்மிகப் பயிற்சியின் மூலம் உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் கணிசமாக வருவாய் ஈட்டும் கல்கி ஆசிரம கிளைகளில், தொடர்ச்சியாக வரி ஏய்ப்பு செய்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்த பணத்தை சொத்துகளில் முறைகேடாக முதலீடு செய்து ஆதாயம் அடைந்ததும், 2014ஆம் ஆண்டு முதல் 409 கோடி ரூபாய் அளவுக்கு ரொக்கத்தை கணக்கில் காட்டாமல் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

கல்கி விஜயகுமார் மற்றும் அவரது மகன் வீடுகள் மற்றும் ஆசிரம வளாகத்தில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரொக்கம் 43.9 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 18 கோடி ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க கரன்சி உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள், 26 கோடி ரூபாய் மதிப்புள்ள 88 கிலோ தங்க நகைகள், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள 1271 காரட் வைரம் என 93 கோடி ரூபாய் மதிப்பிலான கணக்கில் காட்டாத பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வரி ஏய்ப்பு செய்வதற்காக 500 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டாததும் கண்டறியப்பட்டுள்ளதாக தாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. விஜயகுமாரும், அவரது மகனும் இந்தியாவிலும், அமெரிக்கா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூரிலும், வரி ஏய்ப்புக்கு வசதியான வெளிநாடுகளிலும் பல நிறுவனங்களில் முதலீடுகள் செய்துள்ளனர். ஆசிரமத்தில் ஆன்மிகப் பயிற்சிக்கு வந்த வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் மூலம் இந்த நிறுவனங்களுக்கு பணம் கைமாறியுள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் வரி செலுத்த வேண்டிய வருமானத்தை மறைத்து, வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை கூறியுள்ளது. இதேபோல, வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடம் வெளிநாட்டு கரன்சிகளாகவே பணத்தைப் பெற்று, கறுப்புச் சந்தையில் அந்த பணத்தை மாற்றி முறைகேடாக லாபம் பார்த்து வந்தது கண்டறியப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சோதனையில் கண்டறியப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விசாரணையும் நடைபெற்று வருவதாக வருமான வரித் துறை கூறியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!