
கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துல்லாஹ்வின் வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை (10) அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கல்முனைக்குடி, மத்ரசா வீதியில் அமைந்துள்ள மாநகர சபை உறுப்பினர் பரக்கத்துல்லாஹ்வின் வீட்டின் மீது நடத்தப்பட்ட இக்குண்டுத் தாக்குதல் காரணமாக வீட்டின் கதவு, ஜன்னல் கண்ணாடிகள், வாசல் கதவு, சுவர் மற்றும் அவரது மோட்டார் சைக்கிள் என்பன சேதமடைந்துள்ளன.
இத்தாக்குதலின் போது மாநகர சபை உறுப்பினர் பரக்கத்துல்லாஹ் மற்றும் அவரது குடும்பத்தினரும் வீட்டில் இருந்த போதிலும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
சம்பவ இடத்திற்கு வருகை தந்து பாதிப்புகளை பார்வையிட்ட கல்முனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்முனை மாநகர சபையின் ஆளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான ஏ.எம்.பரக்கத்துல்லாஹ் மாநகர சபையின் அதிருப்திக்குழு அங்கத்தவராக இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்தின் பின்னணி பற்றியும் அதன் சூத்திரதாரிகள் யாராக இருப்பர் எனவும் அவரிடம் கேட்டபோது, இப்போதைக்கு என்னால் எதுவும் கூற முடியாதுள்ளது எனத் தெரிவித்த அவர், என்னை அச்சுறுத்தும் ஒரு நடவடிக்கையாக இச்சம்பவத்தைக் கருதுவதாகவும் அது குறித்து ஊடக அறிக்கையொன்றை வெளியிடவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-
















