காதலித்து திருமணம் செய்ததற்காக இளைஞன் ஆணவக் கொலை: – அதிர்ச்சி சம்பவம்

கேரளாவில் காதலித்து திருமணம் செய்ததற்காக இளம்பெண்ணின் உறவினர்களால் இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் தலித் கிறிஸ்துவ குடும்பத்தை சேர்ந்தவர் கெவின் பி ஜோசப், கல்லூரியில் படிக்கும் போது கெவினுக்கும், நீனு என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது.

இரண்டாம் ஆண்டு இளங்கலை பட்டம் படித்து வரும் நீனு, கடந்த 25ம் திகதி முறைப்படி கெவினை பதிவு திருமணம் செய்து கொண்டார். இது நீனுவின் பெற்றோருக்கு தெரியவந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் கெவினுடன் அவரது உறவினர் அனிஸ் என்பவரையும் கடத்தி சென்றுள்ளனர். சுமார் 10 கொண்ட கும்பலால் இவர்கள் காரில் கடத்தி செல்லப்பட்ட நிலையில், அனிஸை காரிலிருந்து தள்ளி விட்டுள்ளனர்.

இவர்களது வீட்டிலிருந்து சுமார் 20 கிமீ தொலைவில் கெவினை அடித்துக் கொன்றுள்ளனர், இதில் முக்கியமான குற்றவாளி நீனுவின் சகோதரர் ஆவார். தகவலறிந்ததும் அதிர்ச்சியில் உறைந்த போன நீனு, கெவினின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பொலிஸ் நிலையம் சென்ற போது புகாரை ஏற்க மறுத்துள்ளனர்.

சுமார் 30 மணிநேரம் கழித்து புகாரை ஏற்ற நிலையில், கெவின் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கெவினின் உறவினர்கள் போராட்டத்தால் விவகாரம் வெளியே தெரியவரவே, டிஜிபி தலைமையில் சிறப்பு படையை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

கோட்டயம் மற்றும் கொல்லத்தில் இரண்டு குழுக்குள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும், குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்று இனியும் நடக்க கூடாது எனவும், எந்தவொரு குற்றச்சாட்டாக இருந்தாலும் உடனடியாக பதிவு செய்யாத பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!