நித்தியானந்தா தலைமறைவாக இருப்பது ஏன்?

பாலுணர்வுக் காணொளி குற்றச்சாட்டில் சிக்கிய சர்ச்சைக்குரிய தமிழக ஆன்மிக குருவான நித்தியானந்தாவின் ஆசிரமும் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. தன்னை கடவுளின் அவதாரம் என அழைத்துக்கொள்ளும் நித்யானந்தா இரண்டு சிறுமிகளை கடத்தி சென்று தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக அகமதாபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க, நித்யானந்தா ஆசிரமத்தின் இரண்டு பெண் நிர்வாகிகள் பிராணபிரியா, தத்வபிரியா என்ற இருவரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை விசாரிக்கும் காவல் துறை அதிகாரி கே டி கமரியாவிடம் பிபிசி பேசியது. குழந்தை தொழிலாளர்களைப் பணியமர்த்துதல், குழந்தை கடத்தல், துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் 365, 344, 323, 504, 506, 114 உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டிருப்பதாகக் கூறினார். மேலும், காணாமல் போன சிறுமிகளின் இருப்பிடம் மாறிக்கொண்டே இருப்பதால், அவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என கமரியா ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் தெரிவிதுள்ளார்.

இந்த வழக்கு விசாரணை வெளிச்சத்திற்கு வந்ததில் இருந்து நித்யானந்தா தலைமறைவாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 2016ம் ஆண்டில் இருந்து நித்யானந்தா தலைமறைவாக உள்ளார், உள்ளூரில் இருக்கிறாரா அல்லது வெளியூர் சென்று விட்டாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போதைய விசாரணை அகமதாபாத் ஆசிரமத்தை மையப்படுத்தியே நடைபெறுகிறது. தேவைப்பட்டால் பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் தலைமை ஆசிரமத்திலும் குஜராத் காவல்துறையினர் விசாரணை நடத்துவர் என்று போலீசார் கூறுகின்றனர்.

சிறுமிகள் எப்படி சிக்கினார்கள்?

காணாமல் போன சிறுமிகளின் பெற்றோர் தரப்பில் இருந்தே குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில், ஒரு கல்வி நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 7 முதல் 15 வயதுடைய தனது நான்கு பெண் குழந்தைகளை அனுப்பியதாக சிறுமிகளின் பெற்றோர் கூறுகின்றனர். பிறகு இந்த சிறுமிகள் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்திற்கு அனுப்பப்பட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அகமதாபாத்தில் உள்ள ஆசிரமம் டெல்லி பப்ளிக் ஸ்கூல் வளாகத்தில் அமைந்துள்ளது.

எனவே சிறுமிகளின் பெற்றோர் போலீசாருடன் சென்று தங்கள் குழந்தைகளை அழைத்துவர முடிவு செய்தனர். ஆனால் அகமதாபாத் ஆசிரமத்தில் தங்களின் இரண்டு குழந்தைகள் மட்டுமே இருந்தனர். மற்ற இரண்டு சிறுமிகள் அகமதாபாத் ஆசிரமம் வர மறுத்துவிட்டனர் என ஆசிரமத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பதில் அளித்தனர். இதனால் தங்களின் இரண்டு மகள்கள் கடத்தப்பட்டதாகவும், சட்ட விரோதமாக சிறைபிடிக்கப்பட்டதாகவும் பெறோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நித்தியானந்தா தொடர்பான சர்ச்சைகள்

2010ல் நித்தியானந்தா காணப்படுகிற பாலுணர்வுக் காட்சிகள் அடங்கிய சிடி வெளியானது. அந்த காட்சிகளில் நடிகை ஒருவருடன் நித்யானந்தா படுக்கை அறையில் உள்ளது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதன் பிறகு தடயவியல் ஆய்வகத்தில் இந்த சிடி உண்மையானது என கண்டறியப்பட்டது. ஆனால் நித்யானந்தாவின் ஆசிரமம் இந்தியாவில் நடத்தப்பட்ட விசாரணை தவறானது என்று வாதிட்டு, அமெரிக்க ஆய்வகத்தில் நடந்த விசாரணையை குறிப்பிட்டு, அந்த சிடி சித்தரிக்கப்பட்டது என கூறியது. ஆனால் இந்த வழக்கில் நித்யானந்தா கைதாகி சிறையில் வைக்கப்பட்டாலும், பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இது தவிர, பெங்களூருவில் உள்ள ஆசிரமத்தில் நடத்த சோதனையில், நிறைய ஆணுறைகள் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2012ல், நித்யானந்தா மீது பாலியல் வல்லுறவு வழக்கும் தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த குற்றச்சாட்டு எழுந்த பிறகும் அவர் தலைமறைவானார். ஆனால் பிறகு தானே முன்வந்து சரணடைந்ததால் நீதிமன்றக் காவலில் வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அவர் தலைமறைவாக இருந்தபோது நடத்தப்பட்ட விசாரணையில் நித்யானந்தா தனது பெண் சிஷ்யையை பாலியல் வல்லுறவு செய்தாக குற்றச்சாட்டு எழுந்தது.

பாலியல் வல்லுறவு, ஆபாசம் தொடர்பான குற்றச்சாட்டுகள் தவிர, தனது கருத்துகளால் பலமுறை சர்ச்சையில் சிக்கியுள்ளார் நித்யானந்தா. குரங்குகள் மற்றும் பிற விலங்குகளுக்கும் கூட சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழிகளை கற்றுக்கொடுக்க முடியும் என்று இவர் கூறியுள்ளார். இது தொடர்பாக ஆராய்ச்சியும் செய்ததாக அவர் கூறினார் . பிறகு ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் புகழ் பெற்ற E=MC2 என்ற சமன்பாட்டை மறுத்து ஏதோ பேசினார். இதனால் சமூக வலைத் தளங்களில் நித்யானந்தாவை பலர் கேலி செய்தனர். மேலும் பெங்களூருவில் சூரியனை நாற்பது நிமிடங்கள் உதிக்கவிடாமல் செய்ததாக அவர் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் பரப்பப்பட்டது.

இது மட்டுமல்லாமல், ஆவிகளோடு நட்பு இருப்பதாகவும் அவர் ஓர் சொற்பொழிவில் பேசினார். பல விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ சத்தியம் உள்ளதா என ஆராய்ச்சி செய்யும் வேளையில், பல கிரகங்களில் மனிதர்கள் வாழ்ந்ததாகவும், கல்வி கற்கவே அவர்கள் பூமிக்கு வந்ததாகவும் நித்யானந்தா வாதிட்டார். இருப்பினும், இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களை நித்தியானந்தா திரட்டியுள்ளார். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும், இவருக்கு சீடர்கள் உள்ளனர். மேலும் நித்யானந்தா 500 புத்தகங்கள் எழுதியுள்ளதாக ஆசிரமத்தின் இணையதளம் குறிப்பிடுகிறது.

யார் இந்த நித்யானந்தா?

தன்னை தானே கடவுள் என்று கூறிக்கொள்ளும் நித்யானந்தா, தமிழ்நாட்டில், திருவண்ணாமலையில் பிறந்தவர். ஆசிரமத்தின் இணையதள தகவலின்படி, நித்யானந்தாவின் காணொளிகளை 18 மில்லியன் மக்கள் காணுகின்றனர். யூ டியூபில் அதிகம் பேர் பின் தொடரும் ஆன்மிக குரு இவர் என்று இவரது ஆசிரமம் கூறுகிறது.

ஜனவரி 1, 1978 அன்று அருணாசலம் – லோகநாயகி தம்பதியினருக்கு பிறந்தவர் நித்யானந்தா. அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ராஜசேகரன். நித்யானந்தாவின் பள்ளிக் கல்வி 12 வயதில் ராமகிருஷ்ண மடத்தில் இவர் கல்வி கற்கத் துவங்கியுள்ளார். பள்ளி படிப்பை 1992ம் ஆண்டில் முடித்தவர் நித்யானந்தா. சிறுமிகள் காணாமல் போன விவகாரத்தில், அகமதாபாத்தில் அமைந்துள்ள இவரது ஆசிரமம் மீதே வழக்கு தொடரப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!