‘டெல்லி மக்களை வெடிகுண்டு வைத்து கொன்று விடுங்கள்’ – உச்சநீதிமன்றம்!

டெல்லியில் நிலவும் காற்று மாசுவை கட்டுப்படுத்த மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்டித்துள்ள உச்சநீதிமன்றம், இதற்கு பேசாமல் வெடிகுண்டுகள் மூலம் ஒரேயடியாக மக்களை கொன்றுவிடலாம் என்று சாடியுள்ளது. டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, தீபக் குப்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகும், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரிப்பது தொடர்வதாகவும், இதனால் ஏற்படும் காற்று மாசால் டெல்லி, என்சிஆர் பகுதியில் வாழும் மக்கள் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுவதாகவும், அவர்களின் வாழ்நாள் குறைந்து வருவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

காற்று மாசை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று மத்திய அரசை கண்டித்த நீதிபதிகள், கேஸ் பெட்டகத்தில் வாழும்படி ஏன் மக்களை கட்டாயப்படுத்துகிறீர்கள், இதற்கு பேசாமல் வெடிகுண்டுகள் மூலம் ஒரேயடியாக மக்களை கொன்று விடலாம் என வேதனையுடன் குறிப்பிட்டனர். மத்திய அரசும், டெல்லி அரசும் தங்களிடையேயான வேறுபாடுகளை மறந்து, ஒன்றாக அமர்ந்து பேசி, நகரின் பல பகுதிகளில் காற்று சுத்தப்படுத்தும் கோபுரங்களை அமைப்பது தொடர்பான திட்டத்தை 10 நாள்களில் தாக்கல் செய்யும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!