புதிய இஸ்லாமிய தீவிரவாதத்தை இல்லாதொழிக்க இராணுவத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் – பிரதமர்!

இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகிய இரண்டும் பாரிய சவால்களுக்கு உட்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஆட்சியை பொறுப்பேற்றுள்ளோம்.

தாக்கம் செலுத்தியுள்ள புதிய இஸ்லாமிய தீவிரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு இராணுவத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும். நாட்டு மக்கள் என்றும் இராணுவத்தினரை கௌரமளிப்பார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் இராணுவ கல்லூரி பட்டதாரிகளுக்கு பட்டமளிப்பு வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை தாமரை தடாக கலையரங்கில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

விடுதலை புலிகள் அமைப்பினை முழுமையாக இல்லாதொழித்த இராணுவத்தினருக்கு ஆயுதமேந்திய தலைவராக செயற்பட்டமையினை இட்டு சர்வதேச மட்டத்தில் பெருமையடைந்துள்ளேன். இதன் சிறப்பு இராணுவத்தினரையே சாரும்.

தீவிரவாதம் சர்வதேச மட்டத்தில் தாக்கம் செலுத்தியிருந்த வேளை யுத்தத்தை நாம் வெற்றிக் கொண்டோம். அது சர்வதேசத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது. 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவின் எஸ். பி. ஐ நிறுவனம் விடுதலை புலிகள் அமைப்பு பலம் வாய்ந்த ஒரு தீவிரவாத அமைப்பு என்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது. விடுதலை புலிகளின் தாக்கம் அமெரிக்காவில் இடம் பெறவில்லை ஆனால் அவர்கள் அந்த அமைப்பை சர்வதேச பலம் வாய்ந்த அமைப்பாக கருதினர்.

2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்பு முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டது. அதுவரை காலமும் 30 வருட கால யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வர முடியாது என்று பல நாடுகளின் இராஜதந்திரிகளும் குறிப்பிட்டார்கள். முடியாத ஒரு விடயத்திற்கு முயற்சிகளை மேற்கொள்வது பயனற்றது என்றும் எடுத்துரைத்தார்கள். இருப்பினும் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்ற இலக்கில் எவ்வித மாற்றத்திiயும் ஏற்படுத்தவில்லை. அந்த வேளையிலும் பல நெருக்கடிகள் காணப்பட்டன.

2005ம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து யுத்தத்தை விரைவாக முடிவிற்கு கொண்டு வந்து அபிவிருத்தியில் முன்னேற வேண்டும் என்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன. இராணுவம், புலனாய்வு பிரிவு பலப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு செயலாளராக கோத்தபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டு யுத்தம் துரிதகரமாக நியமிக்கப்பட்டது. இன்று அவரை நாட்டு தலைவராக மக்கள் தெரிவு செய்துள்ளமை பாரிய வெற்றியாகும் என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!