யாரெல்லாம் இந்திய குடிமக்கள்? – மத்திய அரசு விளக்கம்!

நாடு முழுவதும் என்.ஆர்.சி. என்று அழைக்கப்படுகிற தேசிய குடியுரிமை பதிவேடு தயாரிக்கப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிவித்துள்ளார். தேசிய குடியுரிமை திருத்த சட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு பெரும் வன்முறை போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ள நிலையில், தேசிய குடியுரிமை ஆவண தயாரிப்பும் நாட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. இதை பீகாரில் அமல்படுத்தப்போவதில்லை என்று அந்த மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்தில் 2004-ம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தத்தின்படி, அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தவிர, பிற இடங்களில் பெற்றோர் இந்தியராக இருந்தாலோ அல்லது சட்டவிரோத குடியேறியவர்களாகவோ இல்லாதபோது அவர்கள் இந்தியர்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், தற்போது யார், யார் இந்திய குடிமக்கள் என்பது பற்றிய மத்திய அரசு தரப்பில் மூத்த அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:- இந்தியாவில் 1987-ம் ஆண்டு, ஜூலை மாதம் 1-ந் தேதி அல்லது அந்த தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் அவர்களின் குழந்தைகள் சட்டப்படி இந்திய குடிமக்கள் ஆவர். அவர்கள் குடியுரிமை திருத்த சட்டம் 2019-க்காகவோ, தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்காகவோ கவலைப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார். குடியுரிமை விவகாரத்தில், ஆவணங்களை காண்பிப்பது தொடர்பாக எந்தவொரு இந்திய குடிமகனும் தேவையற்றமுறையில் துன்புறுத்தப்படவோ அல்லது சிரமத்துக்கு ஆளாக்கப்படவோ மாட்டார் என மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!