அரசாங்கத்திற்கு தேவையானவற்றைத் தவிர மேலதிகமாக ஒரு அங்குல நிலமும் இதுவரை சுவீகரிக்கப்படவில்லை. எனினும் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடுகளை உரிமையாளர்களுக்கு வழங்கியே நாம் அவற்றை பயன்படுத்தி வருகின்றோம் என பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தினை மேற்கொள்ளும் நோக்கில் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த அமைச்சர் பசில் ராஜபக்ச கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை இன்று காலை மேற்கொண்டிருந்தார். அதன்போது வலி வடக்கு மக்களுடைய காணிகள் எப்போது விடுவிக்கப்படும் என ஊடகவியலாளர் ஒருவரினால் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் கடந்த 30 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட யுத்தம் காரணமாக அதிஉயர்பாதுகாப்பு வலையங்கள் உருவாகின. எனினும் பாரிய உயர்பாதுகாப்பு வலையம் இந்திய அமைதிப்படையினருடைய காலத்திலேயே உருவாக்கப்பட்டது.
எனினும் அவர்கள் போனபின்னரும் மக்களுடைய காணிகள் அன்றைய அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை ஆனாலும் 2005 ஆம் ஆண்டுக்குப்பின்னர் எந்தப்பகுதியும் இராணுவ மயப்படுத்தப்படவில்லை. 2009 ஆம் ஆண்டில் இருந்து மக்களது நிலங்கள் அவர்களிடமே வழங்கப்பட்டு வருகின்றது.
இருப்பினும் மீதமாக இருக்கும் நிலங்களை எப்போது வழங்குவது என்பது தாமதமான ஒன்று தான். இதேபோலவே தென்பகுதியிரும் அபிவிருத்திக்காக மக்களுடைய நிலங்கள் அரசினால் எடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான அதிவேக நெடுஞ்சாலை ஒன்றினை அமைக்க தென்பகுதியில் மக்களுடைய நிலங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
அதுபோலவே கிழக்கு மாகாணத்திலும் சம்பூரிலும் மக்களது நிலங்கள் அபிவிருத்திக்காக எடுக்கப்பட்டுள்ளது. எனினும் அவை வடக்கு கிழக்கு என்று மாறும் போது பிரதேச வாதம் இனவாதம் என்ற வடிவில் உருவாக்கப்படுகின்றது. எனவே இதனை இனவாதமாக மாற்றாமல் பாகுபாடு காட்டாமல் செயற்பட வேண்டும்.
நாங்கள் மக்களுடைய காணிகளை பறிக்கவில்லை இந்தியய அமைதிப்படை சுவிகரித்த காணிகளிலே நாம் எனக்கு தேவையானதை எடுத்துள்ளோம். வலி. வடக்கில் காங்கேசன்துறை துறைமுகம் பலாலி விமான நிலையம் ஆகியனவற்றிற்கு காணிகள் எடுக்கப்பட்டுள்ளன.
எனினும் நாம் எமக்கு தேவையில்லாது என கருதும் ஒரு அங்குல காணியையும் கையகப்படுத்தி வைத்திருக்கவில்லை. அவ்வாறு எடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கும் உரிமையாளர்களுக்கு சட்டதிட்டங்களின் படி மாற்று நடவடிக்கைகளோ அல்லது நஸ்ட ஈடுகளோ வழங்கப்படும் என்றார்.
இதேவேளை வலி. வடக்கில் உள்ள மக்களது காணிகள் இராணுவத் தேவைக்காக சுவீகரிக்கப்படுகின்றது என கடந்த வருடம் வர்த்தமாணி அறிவித்தல் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் வலி. வடக்கில் ஒட்டப்பட்டிருந்தது.
எனினும் ஊடகவியலாளரினால் கேட்கப்பட்ட கேள்விக்கு சரியான பதிலை வழங்காது வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு என உதாரணங்களையும் உபகதைகளையும் கூறி மழுப்பல் பதிலை வழங்கினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
















