வீடுகளின் சுவர் ஏறி குதித்து படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வாலிபர்!

கோவையில் உள்ள வீடுகளின் சுவர் ஏறி குதித்து படுக்கை அறையை வாலிபர் எட்டிப்பார்க்கும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த வீடுகளில் அதன் உரிமையாளர்கள் பலர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு வீட்டின் உரிமையாளர், தனது வீட்டின் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்த்தார். அதில், 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இரவு 10.30 மணிக்கு வருகிறார். அவர் தனது மோட்டார் சைக்கிளை ரோட்டோரமாக நிறுத்தி விட்டு, வீட்டின் காம்பவுண்டு சுவரை ஏறி குதிக்கிறார். பின்னர் அவர், படுக்கை அறை ஜன்னல் அருகே சென்று துணியை விலக்கி படுக்கை அறைக்குள் எட்டி பார்க்கும் வீடியோ காட்சி பதிவாகி இருந்தது.

அதிர்ச்சி
இதை பார்த்து அந்த வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் தெரிவித்தார். உடனே அவர்கள் தங்களது வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் பார்த்தனர். இதில், அங்குள்ள 3 பேரின் வீட்டு படுக்கை அறையையும் அதே வாலிபர் எட்டிப்பார்க்கும் காட்சி கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது.

போலீசில் புகார்
இது குறித்து அவர்கள் துடியலூர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த வாலிபர் வந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து அவரை தேடும் பணி தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் அந்த வாலிபர், படுக்கை அறைகளை எட்டிப்பார்க்கும் சைகோ மனநிலை கொண்டவராக இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!