நிர்வாண நிலையில் காரில் சடலமாக கிடந்த நித்தியானந்தாவின் சீடர்!

புதுச்சேரி அருகே நள்ளிரவில் மாமியாரிடம் பணம் வாங்க சென்ற நித்தியானந்தாவின் சீடர் ஒருவர், மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு காரில் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி ஏம்பலம் பகுதியை சேர்ந்தவர் வஜ்ரவேல், 45 வயதான இவர் நித்தியானந்தாவின் தீவிர பக்தராக இருந்து பின் சீடராக மாறி உள்ளார். வில்லியனூர் மற்றும் ஏம்பலம் பகுதியில் நித்தியானந்தாவின் பெயரில் பேக்கரி கடை நடத்தி வரும் வஜ்ரவேல், பாகூர் அடுத்த கிருமாம்பக்கத்தில் புதிதாக கடை திறக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார். செவ்வாய்கிழமை இரவு ஏம்பலத்தில் கடையை அடைத்துவிட்டு குருவி நத்தம் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்று 2 லட்சம் ரூபாய் பணம் வாங்க புறப்பட்டுள்ளார். பணம் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு திரும்பியவர், திடீரென மாயமானதாக அவரது மனைவி காவல் நிலையத்தில் அதிகாலை 4 மணிக்கு புகார் அளித்துள்ளார்.

இது குறித்து பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வஜ்ரவேலை தேடிய போது, குருவிநத்தம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காருக்குள் நிர்வாண நிலையில் வஜ்ரவேல் சடலமாக கிடந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் பணத்துடன் வந்த வஜ்ரவேலை, யாரோ மர்ம ஆசாமிகள் காருடன் கடத்திச்சென்று தலையை பாலித்தீன் கவரால் மூடி கொலை செய்து விட்டு, அவரது சடலத்தை நிர்வாணமாக்கி காரின் பின்பக்க இருக்கை அருகே படுக்க வைத்து விட்டு சென்றது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் ? என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே கைலாசா செல்வதாக கூறிச்சென்ற நித்தியின் சீடர் ஒருவர் நேபாள எல்லையில் அனாதை சடலமாக கிடந்த நிலையில், நித்தியின் அதி தீவிர சீடர் வஜ்ரவேல் நிர்வாண நிலையில் கொல்லப்பட்டு இருப்பது நித்தியின் கைலாசவாசிகளை கடும் அதிர்ச்சிக் குள்ளாக்கி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!