அடுத்த ஆண்டு முதல் தமிழகத்தில் பிளாஸ்ரிக் பொருட்களுக்கு தடை – முதல்வர் எடப்பாடி

அடுத்த ஆண்டு முதல் மக்காத பிளாஸ்ரிக் பொருட்களை பயன்படுத்தவும், தயாரித்து, விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார்.

இன்று உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிளாஸ்ரிக்கை ஒழிக்கும் முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக சட்டபேரவையில் விதி எண் 110 கீழ் அறிக்கை ஒன்றையும் அவர் வாசித்தார். அதில் அவர் தெரிவித்ததாவது,

‘இன்று, ஜுன் 5, “உலக சுற்றுச்சூழல் தினம்”. சமுதாயம் நலமாக வாழவும், வளமுள்ள நாடு உருவாகவும் இன்றியமையாததாக விளங்குவது சுற்றுச்சூழல். இத்தினத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க நாம் உறுதி எடுப்போம்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு சுற்றுச்சூழல் துறை மூலமாக புரட்சிகரமான திட்டங்களை புரட்சித்தலைவி அம்மா நிறைவேற்றினார். அவர்கள் வழியில் செயல்படும் அம்மாவின் அரசு தொடர்ந்து அதனை பின்பற்றி வருகிறது.

‘பிளாஸ்ரிக் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யும் வல்லுனர் குழு’ என்ற சிறப்புக் குழுவினை அம்மா அமைத்தார். இந்த வல்லுனர் குழு, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத பிளாஸ்ரிக் பொருட்களான பிளாஸ்ரிக் தாள்கள், பிளாஸ்ரிக் தட்டுகள், பிளாஸ்ரிக் குவளைகள் போன்ற பொருட்களை தடை செய்யவும், பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் வாழை இலைகள், பாக்குமட்டை தட்டுகள், தாமரை இலைகள் போன்றவற்றின் பயன்பாட்டினை ஊக்குவிக்கவும் ஆலோசனை வழங்கியது.

இவற்றில், அன்றாடம் மக்களுக்கு தேவைப்படும் பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கான உறைகள் போன்ற பொருட்களுக்கான பிளாஸ்ரிக் உறைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்க பரிந்துரைத்துள்ளது. ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்ரிக் பொருட்கள், நிலங்களில் தேங்கிவிடும் போது, நீர்நிலைகளை நோக்கிச் செல்லும் நீரின் போக்கு மாறி, நீர் தேங்கி விடும் நிலை உருவாகிறது.

மேலும், கழிவு நீர் செல்லும் பாதைகளிலும் இதன் பாதிப்புகள் அதிக அளவில் உள்ளது. இதனால் தண்ணீர் மாசடைகிறது. மேலும் மழைநீர், பூமியில் கசிந்து நிலத்தடியினை அடையாமல் போவதால், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதும் பாதிக்கப்படுகிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, தேங்கி இருக்கும் பிளாஸ்ரிக் கழிவுகளில் மழைநீர் தேங்கும் போது, நுளம்பு உற்பத்தியாகி, அதன் மூலம் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவுகின்றன. மேலும், மழைநீர்க் கால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு, வெள்ளப்பெருக்கு ஏற்படவும் காரணமாகி விடுகிறது. மண் வளமும் பாதிக்கப்படுகிறது.

தூக்கி எறியப்படும் பிளாஸ்ரிக் கழிவுகள் எரிக்கப்படும்போது, அதன் மூலம் வெளியாகும் நச்சு வாயுவின் மூலமாக மனிதன் மற்றும் உயிரினங்கள் சுவாசிக்கும் காற்றும் மாசடைகிறது. உணவுப் பொருட்களுடன் தூக்கி எறியப்படும் பிளாஸ்ரிக் கழிவுகளை ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் பிற உணவுகளுடன் சேர்ந்து உண்ணும் நிலை ஏற்படுவதனால், கால்நடைகள் மற்றும் வன விலங்குகளின் உயிரிழப்புக்கும் பிளாஸ்ரிக் பொருட்கள் காரணமாகி விடுகிறது.மேலும், பிளாஸ்ரிக் பொருட்கள், பல ஆண்டுகள் ஆனாலும் மக்காத தன்மை உடையதால், அவற்றை அழிப்பதோ, ஒழிப்பதோ இயலாத காரியம்.

இவ்வாறு நிலம், நீர், காற்று போன்ற பல்வேறு நிலையில் மாசு ஏற்பட்டு, மனித உயிருக்கும், சுகாதாரத்திற்கும் பிளாஸ்ரிக் பொருட்கள் பெரும் தீங்கு விளைவிக்க காரணமாகி விடுகிறது. எனவே இவற்றை அறவே தவிர்ப்பது இன்றைய சூழ்நிலையில் கட்டாயமாகிறது. மேற்படி பாதிப்புகளை கருத்தில் கொண்டும், இந்தத் தீங்கினை நம் எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லக்கூடாது என்ற உயரிய நோக்கத்திலும், தமிழ்நாட்டில் 2019-ம் ஆண்டு, ஜனவரி 1 ஆமூ திகதி முதல் பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கான உறைகள் தவிர, தடிமன் வேறு பாடின்றி, இதர மக்காத பிளாஸ்ரிக் பொருட்களான பிளாஸ்ரிக் தாள்கள், பிளாஸ்ரிக் தட்டுகள், பிளாஸ்ரிக் தேநீர், தண்ணீர்க் குவளைகள், தண்ணீர் பொக்கெட்டுகள், பிளாஸ்ரிக் உறிஞ்சு குழல் மற்றும் பிளாஸ்ரிக் கைப்பைகள், பிளாஸ்ரிக் கொடிகள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986-ன் கீழ் தடை செய்ய அம்மாவின் அரசு முடிவு செய்து, தமிழ்நாடு முழுவதும் தடை செய்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

பொது மக்களும், வியாபாரிகளும் மேற்படி பிளாஸ்ரிக் பொருட்களுக்கு மாற்றாக, துணிப் பைகள், காகித உறைகள் போன்ற மக்கும் பொருட்களைப் பயன்படுத்த பழகிக் கொள்ள ஏதுவாக, மேற்படி தடைகளை உடனடியாக அமல்படுத்தாமல், 2019, ஜனவரி மாதம் 1-ஆம் திகதி முதல் அமல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அம்மாவின் தொலை நோக்குத் திட்டமான ‘மழை நீர் சேகரிப்புத் திட்டம்’, பொதுமக்களின் ஒத்துழைப்போடும், பங்களிப்போடும், வெற்றிகரமாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு, நிலத்தடி நீர் பெரிய அளவில் செறிவூட்டப்பட்டது. அதே போன்று, உலக சுற்றுச்சூழல் தினமான இன்று, உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடும், பங்களிப்போடும், அம்மாவின் அரசு செயல்படுத்த இருக்கும் “பிளாஸ்ரிக் இல்லாத தமிழ்நாட்டை” நம் எதிர்கால சந்ததியினருக்கு பரிசளிப்போம் ! என்று கூறி அமர்கிறேன். என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!