கூட்டமைப்பில் போட்டியா? – விரைவில் அறிவிப்பேன் என்கிறார் விக்னேஸ்வரன்

புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பாக, பொறுத்திருந்து பார்ப்போம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கப் போகிறார் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.இந்நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

“ நானும் அவ்வாறு தான் கேள்விப்பட்டேன். அந்தளவே எனக்கும் தெரியும். எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம். முன்னேற்றம் ஒன்று நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் அது கட்சி ரீதியானது என நான் பார்க்கவில்லை.

இதனிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவீர்களா என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்து பேசிய அவர்,

2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபையின் தேர்தலில் போட்டியிடுவேன் என்பது அதற்கு மூன்று மாத காலத்திற்கு முன்பு தான் தெரியும். எனவே அது அந்தந்த நேரத்தில் நடந்துள்ளது. இந்நிலையில் தற்போது இது தொடர்பாக உறுதியாக எதனையும் கூற முடியாது. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அடுத்த மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பாக உரிய நேரத்தில் உரிய பதிலை கூறுவேன் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!