புகார் அளிக்க வந்த வாலிபரை சரமாரியாக தாக்கிய பெண் பொலிஸ்!

கோவை பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கிருஷ்ணவேணி என்பவர் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவர் அங்கு புகார் அளிக்க வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனை அங்கு இருந்த ஒருவர் தனது சென்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும் பெண் ஏட்டு கிருஷ்ணவேணி அநாகரீகமாக நடந்து கொள்வதாக பல்வேறு புகார்கள் வந்தது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாரிடம் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு ஏட்டு கிருஷ்ணவேணி தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்தநிலையில் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையகம் இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அதில் புகார் அளிக்க வந்தவரை தாக்கிய பெண் ஏட்டு கிருஷ்ணவேணி குறித்து விசாரித்து 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனையடுத்து ஏட்டு கிருஷ்ணவேணியிடம் இன்று விசாரணை தொடங்கியது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!