கோப்பாய் கல்வியியல் கல்லூரி விடுதிகள் இராணுவத்தினர் வசம்!

கொரோனா தனிமைப்படுத்தல் முகாம் அமைப்பதற்காக, யாழ்ப்பாணம் – கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் இரண்டு விடுதிகள், இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று திடீரெனத் தீவிரமடைந்துள்ள நிலையில், படையினரின் விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டு, வீடுகளுக்குச் சென்றுள்ள முப்படையினரையும் உடனடியாக பணிக்குத் திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, யாழ்ப்பாணத்தில் இருந்து விடுமுறைக்காக சென்றிருந்த கோப்பாய் பிரதேசத்தில் பணியாற்றும் இராணுவத்தினர், கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் தனிமைப்படுத்தி வைக்கப்படவுள்ளனர்.

இதற்காக கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் இரண்டு விடுதிகள் நேற்று இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக இன்று 45 இராணுவத்தினர் இங்கு அழைத்து வரப்படவுள்ளனர். இவர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை,கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் தனிமைப்படுத்தல் முகாம் அமைக்கப்படும் தகவல் நேற்று மாலை பரவியதை அடுத்து, அதனை அண்டியுள்ள மக்கள் மத்தியில் பதற்ற நிலை காணப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

எனினும், மக்கள் இது தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை என்று இராணுவ வட்டாரங்கள் கூறியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!