மருத்துவ மாணவி மர்ம மரணம்: கொலையா?.. தற்கொலையா?.. – குழம்பிப்போன பொலிஸார்!

தமிழகத்தில் மருத்துவர் கல்லூரி மாணவியும், பயிற்சி மருத்துவருமான தீபாவின் பிரேத பரிசோதனை முடிவில் அவர் தற்கொலை செய்யவில்லை, உடலில் எந்த ஒரு காயமும் இல்லை என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தவர் பிரதீபா. 22 வயதான இவர், வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, சி.எம்.சி காலனியைச் சேர்ந்தவர்.இவரின் தந்தையான ராமேஷ், பிளாஸ்டிக் கம்பெனி நடத்தி வருகிறார். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக இறுதி ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர்களும் வைரஸ் தடுப்பு பணிக்கு தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக அனைவருமே இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மாணவர்கள் தங்கள் வீட்டுக்கு செல்லாமல், விடுதியில் தங்கியிருந்துதான் வேலை பார்க்க வேண்டும் என்றும் ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது. அதன்படிதான் பிரதீபா ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா பிரிவில் பணி புரிந்து வந்தார். இவர் வீடு பெரம்பூரில் இருந்தாலும், அங்கு செல்ல அனுமதி இல்லாததால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள விடுதியில் தனியாக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் கடந்த 16-ஆம் திகதி முதல் தங்கியிருந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து பணி முடிந்து விடுதி திரும்பிய பிரதீபாவை பார்ப்பதற்காக, இன்று அவரின் அறையை சக தோழி ஒருவர் திறக்க முயன்ற போது, உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் உடனடியாக இது குறித்து வார்டனுக்கு தெரிவிக்கப்பட்டு, கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது பிரதீபா சடலமாக கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தோழிகள் மற்றும் வார்டன் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்க, பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொரோனா தொடர்பான பணியில் இருந்ததால், கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம், என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது.

இதன் காரணமாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட போது, அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. இறப்பதற்கு முந்தைய நாள் இரவு கூட, குடும்பத்தினரிடம் பிரதீபா போனில் வெகு நேரம் பேசியுள்ளார். அப்போது அவர் வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருப்பதாக பேசியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனால் பிரேதபரிசோதனைக்கு பின்னரே முழு விபரம் தெரியவரும், ஏனெனில், பூட்டிய அறைக்குள் சடலமாக பிரதீபா மீட்கப்பட்டிருப்பதால், அதன் முடிவில் ஏதேனும் ஆதாரம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையில் பிரதீபா தங்கியிருந்த அறை மற்றும் அவரின் செல்போன்களை போலீஸார் ஆய்வு செய்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இந்தச் சமயத்தில் பிரேத பரிசோதனை முடிந்து பிரதீபாவின் சடலம் அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்ட போதுக, பொதுவாக பிரேத பரிசோதனை செய்யும்போதே இறப்புக்கான காரணம் தெரிந்துவிடும். ஆனால், பிரதீபாவின் பிரேதப் பரிசோதனையில் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.

அவரின் சடலத்திலும் எந்தவித காயங்களும் இல்லை. இருப்பினும் அவரின் உடல் பாகங்களின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து வரும் முடிவுக்குப்பிறகே பிரதீபாவின் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று கூறியுள்ளனர். பொலிசார் கூறுகையில், பிரதீபா, பூட்டிய அறைக்குள் இறந்துகிடந்தார். அதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை நடத்தினோம். ஆனால் அதற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அடுத்து பிரதீபாவின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினோம். அப்போது அவர்கள், பிரதீபாவுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் எந்தவித பிரச்னையும் இல்லை.

தோழிகளிடம் விசாரித்த போதும் எதுவும் சிக்கவில்லை, அன்றைய தினம் இரவு வழக்கம் போல் தோழிகளிடம் குட் நைட் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார், காலையில் சடலமாக கிடந்திருக்கிறார். இதனால் தற்கொலையாக இருக்கலாம் என்று நினைத்தோம், ஆனால் பிரேத பரிசோதனை முடிவிலும் அப்படி இல்லை என்று கூறப்பட்டுள்ளதால், தொடர் விசாரணைக்கு பின்னரும், முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இறப்புக்கான காரணம் தெரிந்துவிடும் என்று கூறியுள்ளனர். எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல், நன்றாக இருந்த பெண் மருத்துவர் திடீரென்று உயிரிழந்திருப்பதும், பூட்டிய அறையில் சடலமாக மீட்கப்பட்டிருப்பதும், பிரேதபரிசோதனையில் கிடைத்திருக்கும் தகவல்களும், மர்மமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!