சிறுமி வன்புணர்வு – சகோதரன், மாமனுக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் – உரும்பிராயில், பதின்ம வயது சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் சகோதரனையும், மாமன் உறவு இளைஞனையும் வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார்.

சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக அவரது தாயார் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது, மருத்துவ சோதனையில் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சிறுமியிடம் வாக்குமூலத்தைப் பெற்றனர். சிறுமி வழங்கிய தகவலின் அடிப்படையில் சிறுமியின் சகோதரரான 19 வயது இளைஞனும் சிறுமியின் மாமன் உறவு முறையுடைய 22 வயது இளைஞனும் கைது செய்யப்பட்டனர்.

சிறுமி, சட்ட மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டுள்ளார். சிறுமியை சுமார் 6 மாதங்களாக சந்தேக நபர்கள் சித்திரவதைக்குட்படுத்தியுள்ளனர் என்பது விசாரணைகளில் தெரியவந்தது.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் மேலதிக நீதிவான் நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் நேற்று முற்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த மேலதிக நீதிவான், சந்தேக நபர்கள் இருவரையும் வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைத்த உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் சிறுமியின் சட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!