ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பில் இந்திய பிரதமருக்கு திடீர் கடிதம்

rajivமுன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கு தொடர்பான சி.பி.ஐ., விசாரணையில் குறைபாடுகள் உள்ளதாகவும் பல முக்கியமான விஷயங்கள் விசாரிக்கப்படவில்லை எனவும் இந்த வழக்கில் சாட்சியம் அளித்த ரமேஷ் தலால், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் 1991ல் ஸ்ரீபெரும்புதூரில், தேர்தல் பிரசாரத்துக்காக சென்றபோது படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்தியது.

ராஜிவ் கொலை வழக்கு குறித்து நீதிபதி, மிலாப் சந்த் ஜெயின் தலைமையிலான கமிஷனும் விசாரணை நடத்தியது. இதில் முக்கிய சாட்சியாக ஆஜரானவர் வழக்கறிஞரான ரமேஷ் தலால்.

இவர் தற்போது பிரதமர் மன்மோகன் சிங், சி.பி.ஐ., இயக்குனர், ரஞ்சித் சின்கா ஆகியோருக்கு ராஜிவ் கொலை வழக்கு குறித்து ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ராஜிவ் கொலை வழக்கு தொடர்பான சி.பி.ஐ., விசாரணையில், ஏராளமான குறைபாடுகள் உள்ளன. ஒரு சில முக்கியமான விஷயங்கள் விசாரிக்கப்படவில்லை.

ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரங்கநாதன், விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த கே.பி., என்ற குமரன் பத்மநாதன் ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன் தனித் தனியாக அறிக்கை வெளியிட்டனர்.

அதில் இந்த கொலைச் சதியில் சாமியார் சந்திராசாமிக்கு தொடர்பிருப்பதாக இவர்கள் தெரிவித்திருந்தனர்.

சிறைச்சாலை கமிஷனும் இதைச் சுட்டி காட்டியிருந்தது. இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.

சி.பி.ஐ., தலைமையிலான பல்நோக்கு விசாரணை அமைப்பான எம்.டி.எம்.ஏ., இதை விசாரிக்கும் என்றும் தெரிவித்தது. ஆனால், இது தொடர்பான விசாரணை இன்னும் முடிவடையவில்லை.

எனவே ராஜிவ் கொலை வழக்கில் எழுப்பப்பட்ட சந்தேகங்கள் குறித்து விசாரித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி எம்.டி.எம்.ஏ.,வுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply