கூகுள் நிறுவனத்தின் கூகுள் ஸ்ரீட் வியூ காரொன்று இந்தோனேஷியாவில் மூன்று வாகனங்களுடன் மோதியுள்ளது.
உலகின் ஒவ்வொரு நகரத்தினதும் வீதிகளின் வரைபடங்களையும் “கூகுள் ஏர்த்” தயாரிப்பதற்காக கூகுள் ஸ்ரீட் வியூ காரில் பொருத்தப்பட்ட கமெராக்கள் மூலம் படம்பிடிக்கும் நடவடிக்கையை கூகுள் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மறுபுறம் சாரதியற்ற கார்கள் தொடர்பான சோதனையிலும் கூகுள் நிறுவனம் தீவிரமாக உள்ளது.
இந்நிலையில் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் கூகுள் ஸ்ரீட் வியூ காரொன்று மூன்று வாகனங்களுடன் மோதியுள்ளமை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இக்கார் முதலில் பஸ் ஒன்றுடன் மோதியதாக இந்தோனேஷிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பஸ்ஸின் சாரதி கோபமடைந்து திட்டியதால் பதற்றமடைந்த காரின் சாரதி அங்கிருந்து வேகமாக நகர முற்பட்டபோது மேலும் ஒரு பஸ்ஸுடனும் லொறியுடனும் அக்கார் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்து இடம்பெற்றதை கூகுள் நிறுவனத்தின் இந்தோனேஷியாவுக்கான தொடர்பாடல் தலைவர் விஷ்ணு மஹ்முட் உறுதிப்படுத்தியுள்ளார். “இவ்விபத்தை நாம் தீவிரமாகக் கருதுகிறோம்.
இவ்விடயம் குறித்து உள்ளூர் அதிகாரிகளுடன் நாம் நெருங்கிச் செயற்படுகிறோம்” என அவர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
இவ்வருட முற்பகுதியில் பொட்ஸ்வானாவில் கழுதையொன்றை கூகுள் ஸ்ட்ரீட் வியூ காரொன்று மோதித் தள்ளியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. எனினும் அக்குற்றச்சாட்டை கூகுள் நிறுவனம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
















