தேர்தல் வன்முறை இடம்பெறக்கூடிய மாவட்டமாக யாழ்ப்பாணம்

தேர்தலில் வன்முறைகள் இடம்பெறக்கூடிய மாவட்டங்களில் வடக்கில் யாழ் மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு (கபே) தெரிவித்துள்ளது.

இன்று (24) வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைப்பின் பணிப்பாளர் அகமட் மனாப் இவ்வாறு தெரிவித்தார். மேலும்,

“தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் கபே அமைப்பிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. ஒரே கட்சியில் போட்டியிடும் அபேட்சகர்களிற்கு எதிராக வெறுப்பூட்டத்தக்கதான பிரச்சாரங்கள் அதிகரித்துள்ளதுடன்.

பொய்யான பிரச்சாரங்களும் அதிகளவில் பரப்பப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கபெற்றிருக்கின்றது. எனவே வெறுப்பூட்டதக்க பிரச்சாரங்கள் அதிகரிக்கும் போது வன்முறைகளும் அதிகரிக்கும் என தேர்தல் ஆணைக்குழுவிற்கு தெளிவூட்டல்களை நாம் வழங்கியிருக்கிறோம்.

அந்த வகையில் வன்முறைகள் அதிகரித்த சில பகுதிகளை பொலிஸ் திணைக்களத்திற்கு அடையாளப்படுத்தியுள்ளோம். வன்னி மாவட்டத்தில் வவுனியா தொகுதியில் முறைப்பாடுகள் மிகவும் குறைவான நிலையில் காணப்படுகின்றமை பாராட்டத்தக்க விடயமாக இருக்கிறது. மன்னார் மாவட்டத்தில் வெறுப்பூட்டத்தக்க பேச்சுக்கள் மற்றும் பொய்யான பிரச்சாரங்கள் போன்ற முறைப்பாடுகள் அதிகளவில் கிடைத்துள்ளது.” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!