சாரா புலஸ்தினியின் மரபணு சோதனை அறிக்கையை மீண்டும் ஆய்வு செய்ய உத்தரவு!

சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்பவரின் மரபணு பரிசோதனை அறிக்கையை மீண்டும் ஆராய்ந்து மன்றிற்கு சமர்ப்பிக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று பணித்தது.

குறித்த வழக்கு விடயம் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவினர் ​நேற்று கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வானின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இதன் போது நீதிமன்றத்திற்கு சாய்ந்தமருது தற்கொலை குண்டுதாரி என அறியப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரனின் தாயார் வருகை தந்திருந்தார்.இதன் போது நீதிவான் இன்று கொழும்பில் உள்ள அரச பகுப்பாய்வு பிரிவிற்கு மீண்டும் அழைத்து சென்று மரபணு பரிசோதனையை மீண்டும் பெற அழைத்து செல்லுமாறு உத்தரவிட்டார்.

மேற்குறித்த விடயம் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைக்காக மேலதிக அறிக்கைகளை நேற்று தாக்கல் செய்து மீண்டும் சந்தேகநபரான தாயாரை அழைத்து செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடந்த கால விசாரணைகளில் சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் சம்பந்தப்பட்ட சாரா புலஸ்தினியின் மரபணு பரிசோதனை ஒத்துப்போகவில்லை என மன்றில் அம்பாறை விசேட குற்றவியல் பிரிவின் அதிகாரி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!