பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை கடிதம் எழுதிய 12 வயது பள்ளி மாணவி!

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநில பாடசாலை மாணவி ஒருவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. உத்தரகாண்டைச் சேர்ந்த ரிதிமா பாண்டே (12) என்ற பாடசாலை மாணவி காற்று மாசு குறித்தும் சூழலியல் மாற்றம் குறித்தும் பிரதமர் மோடிக்கு 2 பக்க அளவில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில், எதிர்காலத்தில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் ஒவ்வொருவரும் ஆக்சிஜன் சிலிண்டருடன் போவது கொடுங்கனவாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் சூழலியல் மாற்றம் குறித்து கவனம் எடுக்க வேண்டும் என்றும், ஆக்சிஜன் சிலிண்டர் என்பது குழந்தைகளின் வாழ்வில் அடிப்படையான ஒன்று இல்லை எனவும் அதில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இந்தியாவின் பல பகுதிகளில் காற்று மாசு ஏற்படுகிறது. அக்டோபருக்கு பிறகு சுவாசிக்க நான் சிரமப்படுகிறேன். 12வயதுடைய நானே இப்படி கஷ்டப்பட்டால் என்னைவிட சிறியவர்களும், குழந்தைகளும் டெல்லி போன்ற இடங்களில் என்ன செய்வார்கள் என்பது கவலையாக இருக்கிறது.

மனிதர்களின் செயல்பாடுகளை சரியாக குறைத்துக்கொண்டால் மாசைக் கட்டுப்படுத்தலாம் என்றும், ஊரடங்கு நேரத்தில் அது சாத்தியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாடசாலை சிறுமியான ரிதிமா பாண்டே சூழலியல் குறித்தும் காற்று மாசு குறித்தும் தொடர்ந்து பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!