உலகமே உற்று நோக்குகின்ற, டயஸ்பொராஸ் மக்களின் பார்வைகளைப் பதித்துள்ள இலங்கை அரசை கிலிகொள்ள வைத்துள்ள வடமாகாண சபைக்கான தேர்தல் இந்தவாரம் நடைபெறுகின்றது.
சர்வதேசத்தின் அழுத்தம், இந்தியாவின் நெருக்குதல் இப்படியாக இலங்கைக்கு மீளமுடியாத நெருக்கு வரங்களால் வட மாகாண சபைத் தேர்தலை அரசு நடத்த வேண்டிய கட்டாயத் தேவையாக வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறுகின்றது.
அரசு தானாக விரும்பி வடமாகாண சபைத் தேர்தலை நடத்தவில்லை என்பது மட்டும் உண்மை. வட மாகாணத் தேர்தல் சம்பந்தமாக இந்த நாட்டின் ஒரு கோமாளித்தன மான நகைச்சுவையான சம்பவம் ஒன்றும் நடந்தது.
தமிழ் கூட்டமைப்பை விட தனக்கு அதிகளவு மக்கள் வாக்களிப்பார்கள் என்று முன்னாள் ராணுவத் தளபதி சரத்பொன்சேகா தெரிவித்திருந்தார். அண்மையில் வடபகுதி சென்று நல்லூர் கந்தசுவாமி கோயிலில் தரிசனம் செய்து விட்டு இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார்.
ஆனால் சரத் பொன்சேகா தனது கட்சி சார்பாக யாரையும் வடமாகாண சபைத் தேர்தலில் களமிறக்கவில்லை. காரணம் வட பகுதியில் சரத் பொன்சேகாவின் கட்சி படுதோல்வி அடையும் போது அந்தத் தோல்வி எதிர்காலத்தில் சரத் பொன்சேகாவின் அரசியலை புரட்டிப் போட்டுவிடும் என்று சரத் பொன்சேகா பயந்து விட்டார்.
அதனால் தனது கட்சியை வட பகுதியில் போட்டியிடாமல் விட்டு விட்டார். வட மாகாணம் மன்னார், முல்லைத் தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய 5 மாவட்டங்களைக் கொண்ட பெரும் நிலப் பரப்பாகும். வட மாணத்திற்கான 36 மாகாண சபை உறுப்பினர்களும் 2 போனஸ் ஆசனங்களுமாக 38 மொத்த ஆசனங்கள் உள்ளது.
மாவட்ட வாரியாக மன்னார் மாவட்டம் 5 ஆசனங்களும், முல்லைத்தீவு மாவட்டம் 5 ஆசனங்களும், கிளிநொச்சி மாவட்டம் 4 ஆசனங்களும் ,யாழ்ப்பாண மாவட்டம் 16 ஆசனங்களும் வவுனியா மாவட்டம் 6 ஆசனங்களும் 2 போனஸ் ஆசனங்களுமாக மொத்தம் 38 உறுப்பினர்கள் வட மாகாணத்திற்கு தெரிவு செய்யப்பட வேண்டும்.
38 உறுப்பினர்களைக் கொண்ட வட மாகாணத்தில் 57 கட்சிகளும் 28 சுயேச்சைக் குழுக்களும் 906 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றார்கள். வட மாகாணத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 5 பேர் போட்டியிடுகின்றார்கள்.
வட மாகாணத்தில் பிரதான கட்சிகளான இலங்கை தமிழரசுக் கட்சி (தமிழ் கூட்டமைப்பு) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (அரசு அணி) ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுடன் வட மாகாண மக்களுக்கு அறிமுகமில்லாத பரிச்சயமில்லாத கட்சிகளான வட பகுதிக்கு இறக்குமதி செய்யப்பட்ட சிறிலங்கா தொழிலாளர் கட்சி, ஜனசத பெரமுன, சோலிச சமத்துவக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயக சுதந்திரக் கட்சி, ஜனநாயக ஐக்கிய முன்னணி, ஐக்கிய சோலிசக் கட்சி, சிறிலங்கா மகாஜனக் கட்சி ஆகிய சிங்களக் கட்சிகள் தத்தமது வேட்பாளர்களை 5 மாவட்டங்களிலும் நிறுத்தியுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் தங்களது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
கிளிநொச்சியில் ஈரோஸ் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் சுயேட்சை அணியாக போட்டியிடுகின்றார்கள். ஈரோஸ் அணியில் யாரும் வெல்லக்கூடிய நிலையில்லை மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலும் வட மாகாணத்தில் யாரும் வெற்றி பெறமாட்டார்கள் என்பதுதான் கள நிலவரங்கள்.
5 மாவட்டங்களிலும் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேச்சை அணிகளை நோக்கினால் கடந்த காலங்களை விட மிகவும் அதிகளவு எண்ணிக்கை கொண்ட சுயேட்சைக் குழுக்கள் பணம் செலுத்தியுள்ளன.
அரசாங்கம் திட்டமிட்டு புனர்வாழ்வு அளிக்கபட்டவர்கள் மற்றும் அரச ஆதரவு பெற்றவர்கள் எனத் தெருத் தெருவாக சுயேச்சைக் குழுக்களை அரசு நிறுத்தியுள்ளது.
இதன் மூலமாக தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கலாம் என்று அரசு கணக்குப் போட்டிருக்கலாம். அதாவது கூட்டமைப்புக்குக் கிடைக்கக்கூடிய ஒரு வாக்கையாவது கூட்டமைப்புக்குக் கிடைக்காமல் தடுப்பது என்ற நோக்கில் பல வகையான சுயேட்சைக் குழுக்களை அரசு சார்பான வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளார்கள்.
பொதுவாக வடக்கை எடுத்துக் கொண்டால் எந்தப் பெரிய ஜாம்பவனை நிறுத்தினாலும் வடக்கில் கூட்டமைப்பின் கைதான் ஓங்கும் என்பது சாமானியர்களுக்கும் தெரிந்த விடயமாகும்.
வடக்கில் கூட்டமைப்பில் போட்டியிடும் முன்னாள் எம்.பிக்கள் என்ற வகையில் சித்தார்த்தன் தர்மலிங்கம் மட்டும் தான் வெற்றியடையக் கூடிய அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக எமது கணிப்பீடுகள் உள்ளது.
கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் வீ.ஆனந்தசங்கரி மற்றும் சிவாஜிலிங்கம் மற்றும் முல்லை மாவட்டத்தில் அரச அணியில் போட்டியிடும் முன்னாள் எம்.பி.கனகரெட்ணம் ஆகியோரின் வெற்றி வாய்ப்புக்கள் மிகவும் அரிதாக உள்ளதாகவே கள நிலவரங்கள் உள்ளது. முன்னாள் எம்.பிக்கள் வரிசையில் ஈ.பி. டி.பி. முன்னாள் எம்.பி.தவராஜா வெல்லக் கூடிய வாய்ப்புள்ளது எனலாம்.
மன்னாரில் கூட்டமைப்பு 2 ஆசனங்களும்,அரச அணி 3 ஆசனங்களும் முல்லைத்தீவில் கூட்டமைப்பு 3 ஆசனங்களும், அரச அணி 2 ஆசனங்களும், கிளிநொச்சியில் கூட்டமைப்பு 3 ஆசனங்களும், அரச அணி 1 ஆசனமும் யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பு 12 ஆசனங்களும் அரச அணி 4 ஆசனங்களும் வவுனியாவில் கூட்டமைப்பு 4 ஆசனங்களும் அரச அணி 2 ஆசனங்களும் பெறக்கூடிய நிலைதான் உள்ளது.
மாகாணம் முழுவதும் கூட்டமைப்பு 24 ஆசனங்களும் 2 போனஸ் ஆசனமாகவும் மொத்தம் 26 ஆசனங்களைப் பெறக்கூடியதாக வடமாகாணத் தேர்தல் கள நிலவரங்கள் உள்ளது.
ஆகக் கூடுதலான வெற்றியாக கூட்டமைப்பின் வெற்றியாக 25 ஆசனங்களும் 2 போனஸ் ஆசனங்களுமாக 27 ஆசனங்கள் மட்டுமே பெறும் நிலையுள்ளது. ஆனால் கூட்டமைப்புத் தலைமைகள் 30 ஆசனங்களை எதிர்பார்க்கின்றார்கள். அரச அணி என்பது 12 ஆசனங்கள் தான் பெறும் நிலையுள்ளது.
இதில் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் அணி மன்னாரில் 2 ஆசனங்களும், வவுனியாவில் 1 ஆசனமும் கிடைக்கலாம். அமச்சர் ரிஷாத் கதியத்தீன் அணி ஆகக் கூடுதலாக 4 ஆசனங்களை மட்டும்தான் பெறலாம் மற்றும் ஈ.பி. டி.பி.மாகாணம் முழுவதும் 9 ஆசனங்கள் பெறலாம். அரச சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியைத் தழுவிவிடலாம் என்று சொல்லமுடியும்
யாழ்.மாவட்டத்தில் பெரும் முன்னெடுப்புடன் போட்டியிடுகின்ற அரச அணி வேட்பாளர் அங்கஜன் வெல்லக்கூடிய வாய்ப்பு அரிது எனலாம். முஸ்லிம் காங்கிரஸ் ஓர் ஆசனமும் பெற முடியாத நிலைதான் உள்ளது.
கூட்டமைப்பு முன்னாள் ஈரோஸ் இயக்க உறுப்பினர்களை கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் உள்வாங்காமல் கழித்து விட்டார்கள் என்பதனால் முன்னாள் ஈரோஸ் இயக்க உறுப்பினர்கள் கூட்டமைப்புக்கு எதிராகவும் கூட்டமைப்புக்கு எதிரான சக்திகளுடனும் இணைந்து கொண்டு தமிழ் மக்களுக்கு எதிரான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோஸ் அணியினர் வெல்ல முடியாது போனாலும் கூட்டமைப்பின் வெற்றி வாய்ப்புக்கான தடங்கல்களில் ஈடுபட்டுள்ளனர். மற்றும் கூட்டமைப்பு தனது வேட்பாளர்கள் பட்டியலில் மக்கள் மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் இருந்த வேளையில் மக்கள் பணிகளில் அயராது பாடுபட்டவர்கள் வேட்பாளர்கள் பட்டியலில் உள்வாங்கப்படவில்லை என்ற ஆதங்கம் நிறையவே உள்ளது.
அதனால் கூட்டமைப்புக்ககு எதிரான சக்திகள் அதிகரித்துள்ளது என்றுதான் கூறலாம். யாழ்.மாவட்டத்தில் ஐ.தே.கட்சியின் முதன்மை வேட்பாளர் துவாரகேஷ்வரன் இவரது வெற்றி வாய்ப்பும் அரிதாகவே உள்ளது.
ஆர்ப்பாட்டம் இல்லாது ஆரவாரம் இல்லாது அமைதியான முறையில் தமிழ் மக்கள் கிழக்கில் வாக்களித்தது போன்று வடக்கிலும் தமிழ் மக்கள் தங்களின் தீர்ப்பை நல்ல முறையில் அளிப்பார்கள்.
அதே போன்று வடக்கு வாழ் முஸ்லிம்கள் இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை முற்றாக நிராகரித்துள்ளார்கள் என்ற தீர்ப்பும் வெளிவரவுள்ளது. முன்னாள் எம்.பிக்களில் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.டி..பி.தவராசா ஆகிய இருவரின் வெற்றியை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.
ஆனால் வடக்கில் நீதி நியாயமான தேர்தலாக இருந்தால் மட்டும்தான் எங்களது இந்த தேர்தல்; கணிப்பீட்டை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் நெயினாதீவு, நாயாறு, கொக்குளாய், வவுனியா பகுதிகளில் ஏதாவது தில்லுமுல்லு வேலைகள் நடக்கலாம் என்ற பெரும் சந்தேகம் எழுந்துள்ளது.
வாக்காளர்கள் வாக்களிக்காமல் தடுப்பது, மிரட்டுவது, பயம் காட்டுவது போன்ற வேலைகளில் கூட்டமைப்பின் எதிர் தரப்பினர் ஈடுபடக்கூடிய அதிக வாய்ப்புள்ளது எனலாம். அவைகளையும் மீறி கூட்டமைப்புக்கு மக்கள் வாக்களிக்கக் கூடிய நிலைதான் வடக்கில் உள்ளது.
கடந்த கிழக்கு மாகாணத் தேர்தலின் போதும் மிகவும் துல்லியமாக கணக்கிட்டுத் தந்தோம். மட்டக்களப்பில் தில்லு முல்லு வேலையயான்றின் மூலம் கூட்டமைப்பின் ஓர் ஆசனம் இழக்கப்பட்டது.
அதனால் கிழக்கில் கூட்டமைப்பு ஆட்சியமைக்க முடியாமல் போனது. வடக்கிலும் அப்படியயாரு நிலையை உருவாக்க எதிர் தரப்பினர் முயற்சிகள் செய்யலாம்.
இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளர் கோபாலசாமி தலைமையில் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக வருகை தந்துள்ளார்கள். மேலும் வெளிநாட்டு, உள்ளூர் மற்றும் ஆசிய கண்காணிப்புக் குழுவினரும் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக இந்த வாரம் இலங்கை வரவுள்ளார்கள்.
வடக்கில் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என்று மார்தட்டும் அரசின் ஒரு தன்மானப் பிரச்சினையாகவே வடமாகாணத் தேர்தல் பார்க்கப்படுகின்றது 8 மாகாணங்களை ஆளும் அரசு வடக்கையும் ஆளலாம் என்ற நப்பாசையில் வடக்கில் அரசும் அரசின் ஆதரவு பெற்ற பல அணிகளும் அரசின் முழு வளங்களையும், ராணுவ பலங்களையும் பயன்படுத்தி இந்தத் தேர்தலை வெற்றி கொள்ளப் பார்க்கின்றது.
வடமாகாணத்தின் வெற்றி என்பது தமிழ் மக்களின் வெற்றி என்பதற்கு அப்பால் கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் மக்களின் பாதுகாப்பும், இருப்பிடத்தைப் பாதுகாக்கவும் அமையும்.
அரசியல் வியாபாரிகளாக மாறிவிட்ட சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் கபட நாடகங்களை கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் அறியக்கூடிய ஒரு நிலையை வட மாகாணத் தேர்தல் புடம் போட்டுக்காட்டவுள்ளது.
மாகாண சபை என்றால் என்ன, அதன் அதிகாரம் என்ன, ஆளுநருக்கு என்ன அதிகாரம், முதலமைச்சருக்கு என்ன அதிகாரம், 13ஆவது சட்டம் என்ன சொல்கின்றது என்பதை 8 மாகாணங்களுக்கும் வட மாகாணத்தில் கூட்டமைப்பு காட்டப் போகின்றது வடமாகாண ஆட்சியைப் பார்த்து கிழக்கு மாகாண ஆட்சியாளர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு அந்த ஆட்சி அமையப் போகின்றது.
மற்றும் கிழக்கு மாகாணத்தில் பொம்மை ஆட்சியை ஒழிப்போம் கிழக்கில் நாங்கள்தான் அட்சி அமைப்போம் என்று கிழக்கு மாகாணத்தில் சூளுரைத்தவர்களின் பொய்முகம் கிழியப் போகின்றது. வட மாகாணத்தின் ஆட்சியால் கிழக்கில் பெரும் மாற்றங்களும், மாறுதல்களும் ஏற்படக் போகின்றன.
வடக்குத் தேர்தல் என்பது சர்வதேசத்திற்கு வடபகுதி மக்கள் சொல்லும் செய்தி என்ன என்று முழு உலகமே பார்த்துக் கொண்டுள்ளது. எதிர்வரும் ஞாயிறு நண்பகலுக்குள் வடபகுதி மட்டுமல்லாது 3 மாகாண முடிவுகளும் இந்தக் கணிப்பீடுகளும் தெரிந்து விடும்.
















