கொரோனாவிலிருந்து மீண்ட தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்!

தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து இருவரும் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். சில நாட்கள் சிகிச்சைக்கு பிறகு இருவரும் குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து கடந்த 2 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் விஜயகாந்த் கடந்த 6 ஆம் தேதி மீண்டும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2 அம் கட்ட மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். விஜயகாந்தின் உடல் நிலை குறித்து வெளியாகும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்” என தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பியுள்ளார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மற்றும் முறையான சிகிச்சைக்கு பிறகே அவர் டிஸ்சாரஜ் செய்யப்பட்டிருப்பதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!