usஇலங்கையில் நேற்று இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக இலங்கையைப் பாராட்டுகின்றோம் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
நடைபெற்று முடிந்த வடமாகாண சபைத் தேர்தல் குறித்து கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தேர்தல்கள் இடம்பெற்ற மூன்று மாகாணங்களிலும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வாக்களிப்பில் பங்கேற்றமையானது ஜனநாயக நடைமுறைக்கு கிடைத்த வெற்றியாகும்.
தேர்தல் வன்முறைகள் தொடர்பில் நாம் தொடர்ந்தும் நாம் கரிசனை கொண்டிருக்கின்றோம். அதேவேளையில் வெவ்வேறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் வெளிப்படையானதும் சுயாதீனமானதுமான விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றமிழைத்தவர்கள் நீதியின் முன் விரைவில் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம்.
சீருடை அணிந்தவர்கள் இந்த சம்பவங்களில் சம்பந்தப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல்கள் குறிப்பாக கவலையளிப்பதாகவுள்ளது.
யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் வட மாகாணத்தில் உரிய சிவில் நிர்வாகத்தை ஸ்தாபிப்பதற்கும் நல்லிணக்க நடைமுறையை முன்னெடுப்பதற்கும் வன்முறை மற்றும் அச்சுறுத்தல் இன்றிய நடைமுறையானது அவசியமானதாகும்.
இதற்கான ஆரம்பமாக இந்த தேர்தல்கள் அமைந்துள்ளது. ஜனநாயகம் என்பது வெறுமனே தேர்தல்களோடு நின்றுவிடுவதில்லை. அனைத்து சமூகங்களையும் சேர்ந்த இலங்கையர்கள் தமக்கு உரித்துடைய சமாதானத்துடனும் கௌரவத்துடனும் வாழத்தக்க வகையில் இன்னும் அதிகமாக செயலாற்ற வேண்டியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















