சகோதரன் மகளை விபச்சாரத்தில் தள்ளிய குற்றத்திற்காக 50 வயது ஆசாமிக்கு ஆயுள் தண்டணை விதித்து உத்தரவிட்டது டெல்லி நீதிமன்றம்.டெல்லியை சேர்ந்தவர் பன்னு(50). உத்தரப் பிரதேசத்தில் கிராமத்தில் இருந்த இவரது சகோதரர் கடந்த 2003ம் ஆண்டு இறந்து விட்டார். சகோதரரின் மனைவியும் ஏற்கனவே பிரிந்து சென்று விட்டார்.
இந்நிலையில் சகோதரனும் இறந்து விட்டதால், அவரது 13 வயது மகள் அனாதையானார். இதனால் சகோதரன் மகளை தான் பார்த்து கொள்வதாக கூறி கிராமத்தில் இருந்து சிறுமியை டெல்லிக்கு அழைத்து வந்தார் பன்னு.
சிறிது நாட்கள் வரை நன்றாக பார்த்துகொண்ட பன்னு, பின்னர் சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். மேலும், சிறுமியை மற்றவர்களுக்கும் விருந்தாக்கி பணம் வசூலித்து வந்துள்ளார். இதை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியும் உள்ளார்.
இதனால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் விஷம் குடித்து, பின்பு காப்பாற்றப்பட்டுள்ளார். இது குறித்து அந்த சிறுமி தான் வேலை செய்து வரும் வீட்டின் உரிமையாளரிடம் நடந்ததை கூறி அழுதார்.
வீட்டின் உரிமையாளர் மூலம், தேசிய மனித உரிமை ஆணையத்தில் சிறுமி முறைப்பாடு செய்தார். இதனால் முறைப்பாடு பதிவு செய்து பொலிசார் பன்னுவை கைது செய்து நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கூடுதல் செசன்ஸ் நீதிபதி வீரேந்தர் பட் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.
விசாரணை முடிந்து நீதிபதி அளித்த தீர்ப்பில் கூறியதா வது:
குற்றம்சாட்டபட்டுள்ள பன்னு வெறுக்கத்தக்கும் வகையில் சிறுமியிடம் நடந்து கொண்டுள்ளார். தந்தையின் இறப்பிற்கு பிறகு பார்த்து கொள்வதாக கூறி கிராமத்தில் இருந்து அழைத்து வந்து சிறுமியை தனது பாலியல் ஆசைக்கு இரையாக்கி கொண்டுள்ளார்.
அதோடு, சிறுமியை கட்டாயப்படுத்தி மது அருந்த செய்து நிர்வாணமாக நடனம் ஆட செய்துள்ளார். கருணையே இல்லாமல் அதன் பின் பலரின் பாலியல் ஆசைக்கு இணங்க வற்புறுத்தி பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். இதற்கு அவரது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார்.
இந்த குற்றத்திற்காக அவருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். எந்தவிதமான கருணையும் காட்டக்கூடாது. அவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர், அவரே அவரது குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர், அவருக்கு கருணை காட்ட வேண்டும் என்ற அவரது வழக்கறிஞரின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
சிறுமியின் வாக்குமூலம் மற்றும் அளித்துள்ள ஆதாரங்களில் உண்மைதன்மை உள்ளது. குற்றத்தை நிருபிக்க அது ஒன்றே போதுமானது. எனவே, குற்றவாளிக்கு பலாத்காரம், அச்சுறுத்தல், கூட்டுசதி, அடைத்துவைத்தல், பாலியலில் தள்ளியது போன்ற குற்றசாட்டுகளின் கீழ் தண்டணை வழங்கப்படுகிறது.
கூடி சதி செய்தமைக்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணையும், பாலியல் பலாத்காரம் செய்தமைக்கு 10 ஆண்டுகள் சிறையும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமைக்கு ஆயுள்தண்டணையும் அளித்து உத்தரவிடுகிறேன். இவற்றை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிடுகிறேன். இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.
















