தொடர்பற முடியா தொப்புள் கொடி உறவு

tamilnadu-studentsஈழம் – தமிழகம், புவியியல் ரீதியாக மட்டுமே பிரித்துப் பார்க்கக்கூடியது. அதுவும் லெமூரியா என்னும் கண்ட நகர்விற்குப் பின்னரான காலத்திலேயே இந்தப் புவிசார் பிளவு நிகழ்ந்திருக்கின்றது.

அதற்கு முன், ஈழம் தமிழகம் என்கின்ற தனித்தேச பிரிவுகள் ஏற்பட்டிருக்கவில்லை என்பதை தொல்லியல், புவிச்சரிதவியல், மானுடவியல் மற்றும் இனவரையியல் ஆய்வுகள் நிரூபிக்கின்றன.

இந்த நிலவியல் ரீதியான தொடர்பு அறுந்து போனதோடு இருதேசங்களுக்கும் இடையிலான பண்பாட்டு ,அரசியல் உறவுகள் முடிவுக்கு வந்துவிடவில்லை. அதன் பின்னரே பண்பாட்டு, அரசியல் உறவுகள் மேலும் விரிவு பெற்றிருக்கின்றன.

ஈழத்தின் தெற்கில் பெளத்த பண்பாட்டு எழுச்சிக்கும் சிங்கள மொழியுருவாக்கத்திற்கும், அதேபோல வடக்கில் தமிழ்- சைவ எழுச்சிக்கும் தமிழகத்துடன் கொண்டிருந்த உறவு மிகப் பிரதான இடத்தைப் பெற்றிருக்கின்றது.

நமக்கு அடித்தால் முதலில் வலிப்பது யாருக்கு?

கால நீட்டிப்பால் மிகத் தொன்மையானதாக இருக்கும் இந்த தொடர்பு, நவீன கால எழுச்சியுடன் தேசிய எண்ண அலை மேலடித்த பின்னர் தான் அருகத்தொடங்கியது. ஆனாலும் இரு தேசங்களுக்கும் இருக்கும் பண்பாட்டு, கலாசார, அரசியல் தொடர்புகளை எத்தனை பூகோள அரசியல் மாற்றங்கள் அடித்துச் சென்றாலும் நிராகரிக்க முடியாது.

குறிப்பாக தமிழக மக்களுடன் ஈழத்தவர் கொண்டிருக்கும் உறவு ஆத்மமயப்பட்டது. அதை உணர்வு மயப்பட்டது என்று கொச்சை வார்த்தைகளால் அவமானப்படுத்தவியலாது.

இக்கரையில் ஈழத்தமிழன் பிணமாகி விழுகையில் வாழ்வுடைந்து அவனுக்காக ஒருவன் தீயில் கருகுகின்றான் எனில் அதற்குப் பெயர் கோழைத்தனமல்ல. உணர்வின் உச்சமல்ல. பக்தனது நம்பிக்கையின் இறுதிப்பிடியாக இருக்கும் ஆத்ம தொடர்பின் வெளிப்பாடே தீ புகுதல். இங்கேயும் அதுவே நிகழ்த்தப்படுகின்றது.

ஏனெனில் ஈழத்தமிழனுக்கு அடித்தால் முதலில் வலிப்பது தமிழகத் தமிழனுக்குத்தான். அவனது இயலாமையும், ஆற்றாமையும் வேறு தெரிவுகளிடமிருந்து கண்ணை மறைத்துவிடுகின்றன. காரணம் உலகில் மிகவும் பலவீனப்பட்ட இனம் தமிழர்கள். இந்த பலவீனத்தில் மட்டும் ஈழ, தமிழக தமிழர்கள் என்ற பிரிவினையைப் பார்க்கமுடியாது.

அரசியல் மயப்பட்ட ஈழத்துப் பிணங்கள்

20 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஈழ – தமிழக உறவு மேலும் பலப்பட்டது என்றே குறிப்பிடவேண்டும். இரு தேசத்தவர்களையும் பிரிக்கும் இந்துமா கடல் நேரடித் தொடர்புகளைப் பேண இடம்கொடுக்கவில்லையாயினும், காட்சி தொடர்பூடகங்களால் தமிழகத்துக்கு அனுப்பப்பட்ட ஈழத்து செய்திகள் அந்தப் பிணைப்பை வலுப்படுத்தின.

செத்து வீழ்வதும், நாடற்று அலைவதும் தம் இனமே என்ற பொது எண்ணத்தை முள்ளிவாய்க்காலின் அறுவடைகளான காணொளியும், புகைப்படமும் ஏற்படுத்தின. அவலத்தின் பாற்பட்ட இந்த உணர்வெழுச்சி அரசியல்மயப்படுதலையும் தவிர்க்கமுடியாத வேளையில் பெற்றுக் கொண்டது.

சிலவிடயங்கள் அரசியல் மயப்படுவது கட்டாயமானது. ஏனெனில் அரசியலால்தான் அதனை முழுவீச்சானதாக மாற்ற முடியும். ஈழத்தவர் பிணங்கள் அரசியல் மயமாதலை இலகுவில் பெற்றுக் கொண்டதாலேயே முழுத்தமிழகத்தின் ஆதரவும் ஈழத்தமிழர் நோக்கி குவியக் காரணமானது. இதன் உச்சமே தமிழக மாணவர் போராட்டங்கள்.

கணவன் மனைவி தொடர்பா?

அண்மையில் வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் சிங்களவர்களையும், ஈழத்தமிழர்களையும் கணவன் – மனைவிக்கு ஒப்பிட்டுப் பேசியிருந்தார் என்று சர்ச்சை கிளம்பி இருந்தது.

அதாவது இலங்கையில் இவ்வளவு காலமும் நடந்த இனப்பிரச்சினையை ஒரு குடும்பப் பிரச்சினையாகவும், குடும்பத்து பிரச்சினைக்குள் தமிழகம் தலையிடுவது தேவையற்றது எனவும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார் என்று “த ஹிந்து’ பத்திரிகை தெரிவித்தது.

தான் தெரிவித்த கருத்து திரிபுபடுத்தப்பட்டு விட்டதாகவும், தமிழகத்தைக் கொச்சைப்படுத்தும் விதத்தில்தான் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

சிங்களவர்களாகிய பெரும்பான்மை இனத்தவர்கள் சிறுபான்மை இனத்தவர்களான தமிழர்கள் மீது கொண்டிருக்கும் காழ்ப்புணர்வை, வெறித்தனத்தை கடந்த காலங்களில் நேரடியாக அனுபவித்து வந்த ஒருவர் இவ்வாறான கருத்தை வெளியிடவோ, ஏற்றுக் கொள்ளவோ முடியாது.

ஏனெனில் தமிழர்களையும், சிங்களவர்களையும் கணவன் – மனைவியாக ஏற்றுக் கொண்டால், தவிர்க்கவே இயலாத பல கேள்விகள் எழுகின்றன. 2006 முதல் 2009 வரையான ஆண்டுகளில் இவ்வாறு உவமைப்படுத்தப்படும் கணவனுக்கு என்ன ஆனது? கணவன் இரத்த போதையேற்றியிருந்தாரா? அல்லது கணவன் பார்வையிழந்தவராகவோ, கேட்டல் குறைபாடுடையவராகவோ இருந்தாரா? மனைவியும் பிள்ளைகளும் முள்ளிவாய்க்கால் வரை விரட்டி விரட்டி துவம்சம் செய்யப்படுகையில் சொந்த மகள்களும், சகோதரிகளும் கிழித்தெறியப்படுகையில் கணவன் எங்குபோயிருந்தார்?

இந்தச் சொற்கள் அறிக்கைகளுக்குரியன சிங்கள – தமிழ் இனப்பிரச்சினையில் ஒரு விடயத்தை மட்டும் தெளிவாகப் பார்க்கலாம். வடக்கிலும், கிழக்கிலும் தமிழர்கள் கொன்றொழிக்கப்படுகையில் சிங்களவர்கள் எந்த எதிர்ப்புக் குரலும் காட்டுவதில்லை.

எங்காவது விரல் விட்டு எண்ணக்கூடிய சிங்களவர்கள் ஒரு கழிவிரக்கத்தை மாத்திரம் உதிர்ப்பது வழமை. சில கலவரங்களில் தமிழர்களை தங்களது வீட்டில் பதுக்கிய, காப்பாற்றிய உதாரணங்களை இதுபோன்ற வாதங்களில் பழையவர்கள் எடுத்துவிடுவது வழமை.

இந்தப் பதுக்கி வைத்துக் காப்பாற்றும் சிங்களவர்கள் கூட இப்போது இருப்பதாகத் தெரியவில்லை.அப்படி இப்போதும் அதே மனப்பான்மையுடன் சிங்களவர்கள் இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் இனவழிப்பை வெடி கொழுத்தி கொண்டாடியிருக்கமாட்டார்கள்.

இன ஐக்கியம், நல்லிணக்கம், பல்லினப்பண்பாடு என்ற விடயங்கள் அனைத்தும் சிறுபான்மையினத்துக்கும், அறிக்கைகளுக்குமே பொருத்தம். யதார்த்தத்துக்கும், பெரும்பான்மையினத்தின் நடைமுறைக்குமல்ல.

தமிழகத்தை புறக்கணிப்பது யார்?

ஏதுமற்று இருக்கும் தமிழினம் இப்போது என்ன செய்யவேண்டும்? தமக்கு கிடைத்த வாய்ப்புக்களை பயன்படுத்தி வெளியுலகத் தொடர்புகளை வலுப்படுத்துவதுதான் இப்போதைக்கான ஒரே செயல்முறை. அதை மட்டுமே செய்யவும் முடியும்.

ஏனெனில் ஈழத்தமிழர்கள் கொலைகார கணவன்களுக்கு மத்தியில் தனித்துவிடப்பட்டிருக்கின்றனர். இந்தத் தேர்தல் திருவிழாக்கள் அனைத்தும் மக்களையும், அழுத்தும் சர்வதேசத்தையும் முட்டாள்களாக்கும் பொறிமுறைகள். அற்ப பதவி நிரப்பல்களுக்காகவும் போட்டிக்காவும் நீண்டகால உறவுகளை முறித்துக் கொள்ளல் அபத்தமானதும், அசிங்கமானதுமாகும்.

நமக்காக குரல் கொடுப்பவர்களுடன் இணைந்து செயற்பட்டாலே இப்போது கனிந்திருக்கின்ற வாய்ப்பை மேலும் விரிவுபடுத்திக் கொள்ளமுடியும். தமிழகத் தமிழர்களையும், ஈழத் தமிழர்களையும் பிரித்து வைக்கும் நோக்கம் தமிழர் தரப்பிலிருந்து எழுவது சாத்தியமான ஒன்றல்ல.

அது வேறு பக்கத்திலிருந்தே எழவேண்டும். இரு தேச தமிழின ஒன்றுபடலாலும் ஆபத்து எனக் கருதுபவர்கள் பக்கமிருந்தே இந்த எண்ணம் உருவாக வாய்ப்பிருக்கின்றது. அப்படியே நாம் தமிழகத்தை விட்டு விலக விரும்பினால் முதலில் நாம் பேசும் மொழியையும், உடுத்தும் பட்டு வேட்டியையும் கழற்றிப் போட வேண்டும்.

ஏனெனில் இரண்டும் தமிழக உணர்வுத் தளங்களிலிருந்தும், பண்பாட்டுத் தளங்களிலிருந்தும் நமக்கு கிடைத்தவைதான். நாம் தமிழகத்தை விட்டு விலக விரும்பினால் முதலில் நாம் பேசும் மொழியையும், உடுத்தும் பட்டு வேட்டியையும் கழற்றிப் போட வேண்டும்.

ஏனெனில் இரண்டும் தமிழக உணர்வுத் தளங்களிலிருந்தும், பண்பாட்டுத் தளங்களிலிருந்தும் நமக்கு கிடைத்தவைதான்.

Tags: , , , ,

Leave a Reply