சுழிபுரம் சிறுமி கொலை – 4 பேர் சந்தேகத்தில் கைது

சுழிபுரத்தில், பாடசாலை சீருடையுடன் 6 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் நேற்று மாலை குறித்த சிறுமியின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. சுழிபுரம் பகுதியை சேர்ந்த சிவநேஸ்வரன் றெஜினா எனும் 6 வயதுடைய பாடசாலை மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தரம் ஒன்றில் கல்வி பயிலும் இந்த மாணவி பாடசாலைக்குச் சென்று மதியம் வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில் தாயார் சமூர்த்தி வங்கிக்குச் சென்றுள்ளதுடன், தகப்பானார் கூலி வேலைக்குச் சென்றுள்ளார்.

மதியம் 3.00 மணியளவில் வீட்டிற்கு வந்த தாயார் மகளைக் காணவில்லை என தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்று தேடிய போது அங்கு வரவில்லை என சிறுமியின் பெரிய தாயார் தெரிவித்துள்ளார். சிறுமி எங்கு சென்றிருப்பாளோ தெரியவில்லை என தாயார் உறவினர்கள் மற்றும் அயலவர் வீடுகளில் தேடிய போது இந்த விடயத்தினை அறிந்த அயல் இளைஞர்கள் அனைவரும் சேர்ந்து கிராமம் பூராகவும் தேடியுள்ளனர்.

அப்போது அந்தப் பகுதியில் இருந்த 200 மீற்றர் தூரத்தில் ஆள்நடமாட்டம் அற்ற பகுதியில் காணப்பட்ட கிணற்றில் சிறுமியின் சடலம் கிடந்துள்ளது. சிறுமியைச் சடலமாக கண்ட இளைஞர் கதறி அழுதவாறு சிறுமியின் சடலம் கிணற்றில் இருப்பதை வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அந்த தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சிறுமியின் சடலத்தினை சீருடைகள் அற்ற நிலையில் உள்ளாடையுடன் மட்டும் கிணற்றில் இருந்து மீட்டுள்ளனர். சிறுமியின் கழுத்தினை கயிற்றால் நெருக்கிய தடயம் காணப்படுகின்றதுடன், காதில் இருந்த தோடு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கழுத்தில் காணப்படும் அடையாளத்தினை வைத்து வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!