டிசம்பர் வரை நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்!

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாய அமைப்புகளில் ஒன்றான பாரதிய கிசான் யூனியனின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், செய்தி தொடர்பாளருமான ராகேஷ் திகாயத், போராட்டத்தின் ஒரு பகுதிய தற்போது பல்வேறு மாநிலங்களில் மகா பஞ்சாயத்துகளை நடத்தி வருகிறார்.

அந்தவகையில் மேற்கு வங்காளத்தில் இத்தகைய பஞ்சாயத்துகளை நடத்திய அவர் நேற்று பிரயாக்ராஜ் வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

விவசாயிகள் போராட்டம் இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் வரை நீளும் வாய்ப்பு இருக்கிறது. இந்த சட்டங்கள் வர்த்தகர்களையும் அழித்து, சிறு வணிகங்களையும் மூடுவதுடன், சிறு தொழில் துறையையும் சீரழித்து விடும். வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்காகவே இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

இந்த அரசு ஒரு அரசியல் கட்சியை சேர்ந்திருந்தால், அது விவசாயிகளுடன் பேசி பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்கும். ஆனால் இந்த அரசோ பெருநிறுவனங்களால் நடத்தப்படுகிறது. எனவே முழு நாட்டையும் விற்பனை செய்வதில் மும்முரமாக உள்ளது.

இந்த சட்டங்களுக்கு எதிராக டெல்லி போராட்டக்களத்திலேயே இருக்கப்போவதில்லை. மாறாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று இந்த சட்டங்களின் தீமையே எடுத்துரைக்க இருக்கிறேன்.

இவ்வாறு திகாயத் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!