அதிகரிக்கும் கொரோனா தொற்று: மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா?

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:- கேரளாவில் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் பேரும், கர்நாடகத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோரும் என 19 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு ஏறுமுகமாக இருக்கிறது. அதில் தமிழகமும் அடங்கும். ஏற்கனவே தமிழகத்தில் 7 ஆயிரம் வரை நாள் ஒன்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் அதனை ஒப்பிடும் போது தற்போது ஆயிரம் என்ற அளவில்தான் உள்ளது. இருந்தாலும், இது கவலை அளிக்கக்கூடிய செய்தியாக பார்க்க வேண்டும். இதனை தடுக்க பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த டாக்டர்களின் வேண்டுகோள்.

பொதுமக்கள் அலட்சியம்

தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைந்துள்ளது, அதனால் நோய் தொற்று பரவாது என பொதுமக்கள் முக கவசம் அணியாமல் அலட்சியமாக இருக்கின்றனர். திருமணங்கள், பிறந்தநாள், இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் போன்றவற்றின் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் நோய் தொற்று தமிழகத்தில் அதிகரித்தது. இந்த மாதம் இதனுடன் சேர்த்து அரசியல் சார்ந்த கூட்டங்களும் நடைபெறுகின்றன. இவற்றிலும் பொதுமக்கள் முக கவசம் அணியாமல் பங்கேற்கின்றனர்.

கொரோனா நுண்கிருமிக்கு பாகுபாடு தெரியாது. எனவே பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள், நிகழ்ச்சிகளில் தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இதனை கடைப்பிடிக்காததால்தான், மயிலாப்பூரில் ஒரு வங்கியிலும், வில்லிவாக்கத்தில் ஒரு விடுதியிலும் பலருக்கு தொற்று ஏற்பட்டது.

தற்போது வரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் 16 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். எனவே அனுமதி பெற்ற அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

சவால் நிறைந்த மாவட்டங்கள்

மேலும் பரிசோதனைகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 36 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. தற்சமயம் 20 லட்சம் தடுப்பூசிகள் இருப்பு உள்ளன.

நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டு தனிமையை கடைப்பிடிப்பதை தவிர்க்கின்றனர். இதனால் மற்றவர்களுக்கும் நோய் தொற்றை அவர்கள் பரப்புகின்றனர். அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கொரோனா கவனிப்பு மையத்தை திறக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், திருப்பூர், தஞ்சாவூர் உள்ளிட்டவை சவால் நிறைந்த மாவட்டங்களாக உள்ளது.

கொரோனா கடந்த ஆண்டு மார்ச் மாதம் எப்படி பரவியதோ அதைப்போன்று படிப்படியாக தற்போது பரவுகிறது. ஆனால் கடந்த முறையை விட இந்த முறை தடுப்பு வழிமுறைகள் நிறைய இருக்கின்றன. டெங்குவை ஒழித்தது பொதுமக்களின் ஒத்துழைப்புடன்தான். ராயபுரம், திரு.வி.க.நகரில் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடிந்தது.

மீண்டும் ஊரடங்கா?

முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.15 கோடி வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதம் வசூல் செய்வது அரசின் நோக்கம் இல்லை. அபராதம் விதித்தால்தான் மக்கள் முக கவசம் அணிகின்றனர். கடந்த 3 நாட்களில் முக கவசம் அணிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசியல் கட்சி கூட்டங்களில் தொண்டர்கள் முக கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.

தேனாம்பேட்டை, அண்ணாநகர், அம்பத்தூர், வளசரவாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா என்பதை சொல்லுவதற்கான அதிகாரிகள் நாங்கள் இல்லை. இருந்தாலும் ஊரடங்கு தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம். தற்போது 19 மாநிலங்களில் தொற்று அதிகரித்துள்ளது. தடுப்பூசி மிக முக்கியமான ஆயுதம்.

இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!