மு.க. ஸ்டாலினுக்கு சவால் விடுத்த முதல்வர் பழனிச்சாமி!

திமுகவுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டதாக தேர்தல் பரப்புரையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள குடவாசலில், பரப்புரையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற தேர்தலின்போது, பொதுமக்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகள் என்னவாயிற்று? என கேள்வி எழுப்பினார். முதல்வர் ஆகிவிடலாம் என்ற, திமுக தலைவர் ஸ்டாலினின் கனவு பலிக்காது என குறிப்பிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சி தொடரவே மக்கள் விரும்புகின்றனர், எனவும் தெரிவித்தார்.

ஒரே மேடையில் தன்னுடன் விவாதிக்கத் தயாரா என திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சவால் விடுத்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அவர், இந்த தேர்தலுடன் அதிமுக காணாமல் போய்விடும் என ஸ்டாலின் பேசிவருவதை சுட்டிக்காட்டி, அதிமுகவை அழிக்கவோ ஒழிக்கவோ முடியாது என்றார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவை அழித்துவிடலாம் என நினைத்தவர்களின் கனவு பளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். மு.க. ஸ்டாலின் மீது மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நம்பிக்கை இல்லை என்று விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, அதன் காரணமாகவே, அவர் உயிருடன் இருந்தவரை ஸ்டாலினுக்கு பதவி வழங்கவில்லை கூறினார். மு.க,. ஸ்டாலினுக்கு நிர்வாகத் திறமை இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து திருவாரூரில் பேசிய அவர், திமுகவிற்கு சரியான பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டதாக கூறினார். மு.க.ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு ஒருபோதும் நிறைவேறாது என விமர்சித்த முதலமைச்சர், அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டதாக தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!