மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங்கின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்!

2004 மே முதல் 2014 மே வரை இந்தியாவின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிற்கு தற்போது 89 வயது. உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூச்சுத்திணறல், நெஞ்செரிச்சல் ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இந்த தேசம் பிரார்த்தனை செய்வதாக காங்கிரஸ் கட்சித் தலைமை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அவரது உடல்நலனுக்காக பிரார்த்தனை செய்வதாக பஞ்சாப் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்மோகன் சிங் விரைவில் குணமடையவும் நலமுடன் இருக்கவும் தாம் பிராத்திப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்-மைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாகத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு செய்தியில், “மாண்புமிகு முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் விரைவாகவும் முழுமையாகவும் நலம்பெற விழைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்,

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட் செய்து உள்ளார்.
இந்த நிலையில் மன்மோகன்சிங்கின் உடல்நலம் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவரது உடல்நலம் சீராக உள்ளது என்றும் அவருக்கு வழக்கமான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்மோகன்சிங் கடந்து ஏப்ரல் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 10 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!