போருக்குப் பின்னான காலத்தில் அநேகவீடுகளில் ஒவ்வொரு தாய்மாரின் உள்ளத்திலும் இந்த ஒப்பாரி மெளனத்திரைக்குள் ஒளிந்து ஒலித்தபடியேதான் இருந்தது.
ஏனெனில் போரின் இருளில் எங்களின் இளையதலைமுறையின் உயிர்கள் ஈவிரக்கமின்றி அதிகாரத்தால் காவுகொள்ளப்பட்டிருந்தன. விடுதலைக்காகப் போராடப் போனவர்களை மாத்திரமன்றி, உயிர்ப் பயத்தில் பதுங்கு குழிக்குள் ஒளிந்திருந்த வர்களைக்கூட தப்பிக்க அதிகாரம் அனுமதிக்கவில்லை.
மூன்று தசாப்தங்களா எம்மினத்தின் மீது நிகழ்ந்து வந்த இன அழிப்பின் உச்சக்கட்டம் முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றப்பட்டிருந்தது. எங்கும் குருதியும், ஓலங்களும், பிணங்களும், தனித்து துடித்தபடி கிடக்கும் உடல் அவயவங்களும் அந்த மணல்வெளியை நிறைத்திருந்திருந்தன.
குடியிருக்குமிடமெல்லாம் சவக்கிடங்கானது. குண்டு மழையில் தப்பிப்பிழைத்தவர்கள் சீருடைக்காரர்களால் பிடிக்கப்பட்டு, நிர்வாணக் கொலைக்குழிக்குள் தள்ளப்பட்டனர்.
பெண்கள் பலவந்தப்புணர்வுக்கு பொது வெளியில் உட்படுத்தப்பட்டு, பின்னர் வெடி வைத்து சிதைக்கப்பட்டனர். அப்படியும் வெறியடங்காத சில சீருடைகள் பெண்களின் பிணங்களையும் மணல் வெளியில் புணர்ந்து, இச்சை தீர்த்தன.
இவ்வளவு துயர்களையும் சுமந்தவர்கள், அதன் பின்னும் ஓவென்று ஒருதரம் கத்தி தங்களுக்காக தாங்கள் அழுவதற்குக் கூட அனுமதிக்கப்படாத நிலையே நீடித்தது.
புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் மக்களை அடக்கி ஒடுக்கி, சில சலுகைகளை விட்டெறிவதன் மூலம் அவர்களின் உரிமைக்கான குரலை தனக்கிசைவான திசையில் பயணிக்கச் செய்துவிடலாம் என்பதே ஆட்சியாளர்களின் எண்ணமாக இருந்தது.
அதிகாரத்தின் எண்ணத்தை செயற்படுத்தும் பொறுப்பு, எள் என்னும் முன்னரே எண்ணெயாக வந்து நிற்கும் இணக்க அரசியல்முகவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர்களும் வாரியிறைக்கப்படும் அரச நிதியை தங்களின் சொந்தச் சொத்துப் போன்று மக்களை விடுதலை என்ற பாதையை மறக்கச்செய்து, அபிவிருத்தி என்ற திசை நோக்கி அழைத்துச் செல்லமுற்பட்டனர்.
ஏற்கனவே போருக்காக திறைசேரியின் அத்தனை செல்வப்பாத்திரங்களையும் அரசு வழித்து துடைத்து விட்டதால், அபிவிருத்திக்காக போர் நடந்த இடங்களைக் காட்டி உலகத்திடம் பிச்சையயடுத்து, அதனையேதான் ஏதோ பெருமனது படைத்து தருவதாக அரசும் பாவனை செய்தது.
ஆனால் என்னதான் அபிவிருத்தி என்ற பெரும்போர்வை கொண்டு மூடியபோதும், போரின் காயங்களையும், வலிகளையும், நிணங்களையும் மறைக்கவே முடியவில்லை.
தங்கள் பிள்ளைகளை, கணவனை, மனைவியை, சகோதரர்களை கண்முன்னே கொன்றவர்களை மக்கள் மன்னிக்கத் தயாரகவில்லை. தங்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு சலுகையும் அவர்களின் இழப்பை ஒருபோதும் ஈடுசெய்யப்போவதில்லை என்பது அவர்களுக்குத் தெரியும்.
இறுதிப்போரில் நடந்த அக்கிரமங்களின் ஆதாரங்களாக புகைப்படங்களும், காணொலிகளும், பகட்டுத்திரையின் ஓரங்களை எரித்துக் கொண்டு, உண்மையின் குரல்கள் உலகமுற்றத்தில் ஒலிக்கத் தொடங்கின.
தமிழர்கள் மீதான தன் குருட்டுப்பார்வையை மீள்பரிசீலனை செய்தது உலகம். நமக்குச் சாதகமான சில கதவுகள் திறந்து கொண்டன. போர் முடிந்துவிட்டது தானே.
தமிழர்களுக்கு இனியும் நல்லிக்கணத்தை ஏற்படுத்தக்கூடிய தீர்வை வழங்காமல் பின்னடித்தால் விளைவு வேறாக இருக்கும் என்று கண்டிப்பாக உலகம் சொன்ன பின்னும் இலங்கை நாடகமாட முடியாது.
ரமணா விஜயகாந்த் பாணியில் சொல்வதென்றால் இலங்கை அரசுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை நல்லிணக்கம். ஆனால் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அதை நிறைவேற்றத் தானே வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த ஜெனீவாத் தொடரில் எல்லா நாடுகளும் கடித்துக் குதறிவிடக்கூடும்.
இத்தகைய அழுத்ததின் பேரால்தான், தன் பிடிவாதத்தை கைவிட்டு வடக்குத் தேர்தலை நடத்தியது அரசு. மனதுக்குள் நாளும் பொழுதும் ஒப்பாரிகளோடு வாழ்ந்து கொண்டிருந்த மக்கள், தம்மை முள்ளிவாய்க்காலில் துடிதுடிக்க வீழ்த்திய அதிகாரத்தை தேர்தலில் தங்கள் முன் தலைகுனிய வைக்கக் கங்கணம் கட்டினர்.
இந்த நிலையில் மாற்றுத்தெரிவுகள் வேறேதும் இல்லாத நிலையில் அவர்களின் ஒரே நம்பிக்கையாக கூட்டமைப்பு மாத்திரமே எஞ்சியது. தேர்தலின் ஆரம்பத்திலேயே முதலமைச்சர் வேட்பாளர், ஏனைய வேட்பாளர்கள் விடயத்தில் கூட்டமைப்பு தடுமாறினாலும், பின்னர் புலிகளின் பிரதிநிதிகள் போன்று மேடைகளில் முழங்க, மக்கள் வாக்குகள் கொண்டு அரசை செப்ரெம்பர் 21 ஆம் திகதி வடக்கில் சாய்த்தனர்.
வழக்கமாகவே தேர்தல் என்றாலே தங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பது போல விட்டேத்தித்தனத்தோடு நடந்து கொள்ளும் வடக்கு மக்கள் அன்றைக்கு இது எங்களின் வரலாற்றுக் கடமை என்பது போல பேரெழுச்சி கொண்டு வாக்களிக்க வந்தனர். இதற்கு முக்கிய காரணம் இணங்கிபோக நாம் தயாரில்லை.
எங்கள் உரிமைகளோடு வாழவே நாம் விரும்புகிறோம் என்ற செய்தியைச் சொல்லத்தான் இந்த வாக்குப் புரட்சி நடந்தது. தங்களுக்கான தமிழர் அரசின் அத்திபாரம் போடப்படுவதாக நினைத்தே தங்களின் ஒவ்வொரு வாக்கையும் அளித்தனர்.
மக்களின் ஆணை கிடைத்ததும் நாங்கள் ஒருபோதும் ஆளுநருக்கு முன்னாலோ அல்லது ஜனாதிபதிக்கு முன்னாலோ பதவியேற்க மாட்டோம் என்று கூட்டமைப்பு அறிவிக்க மக்களுக்குப் புல்லரித்தது.
ஆளுநருக்கு முன்னால் பதவியேற்காமல் நியமனக் கடிதத்தை மட்டும் பெற்றுக் கொண்டார் முதலமைச்சர் விக்னேஸ்வரன். நாங்கள் சரியானவர்களையே தேர்ந்திருக்கிறோம் என்று தம்மைத்தாமே பாராட்டிக் கொண்டனர். ஆனால் அதன் பின்னர் மீண்டும் முருங்கைமரத்தில் வேதாளம் ஏறிக்கொண்டது.
அமைச்சுப்பதவிகள் யாருக்கு என்பதில் கூட்டமைப்புக்குள் குத்துவெட்டுகள் தொடங்கின. கூடி நின்று மக்களிடம் வாக்குக் கேட்டவர்கள் கன்னை பிரிந்து நின்று அடிபடத் தொடங்கினர். இந்தப்பத்தி எழுதப்படும் வரை அமைச்சுப்பதவி குறித்த இழுபறி நீடிக்கவே செய்கிறது.
இந்தக்குழப்பம் உச்சக் கட்டத்தை தொட்ட அடுத்தடுத்த நாள்களிலேயே கூட்ட மைப்பின் தலைவர் சம்பந்தன் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார். அதன் பின்னர் ஜனாதிபதி முன்னிலையில் விக்னேஸ்வரன் முதலமைச்சராகப் பதவியேற்பார் என்று அறிவிக்கவும் செய்தார்.
உண்மையில் இலங்கை அரசமைப்பின் படி கட்டாயமாக ஜனாதிபதி அல்லது ஆளுநர் முன்னிலையில் தான் ஒரு முதலமைச்சர் பதவியேற்க வேண்டும் என்று சட்டமிருந்தால் கூட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்த சந்தேகம் எழுந்திருக்காது.
ஆனால் மேல்நீதிமன்ற நீதிபதி அல்லது பிரதமநீதியரசர் என்போர் முன்னிலையில்கூட பதவியேற்க கொள்ள வசதி இருக்கும்போது, இப்படி மஹிந்தவின் காலில் அட்டாங்க நமஸ்காரம் செய்வதை மக்களால் ஜீரணிக்க முடியவில்லை.
எப்போதும் எதிர்ப்பரசியல் என்பது சாத்தியமற்றதுதான். ஆனால் தேவையற்ற விடயத்துக்குக் கூட வளைவது தான் இங்கு பிரச்சினையாகிறது. எப்போதும் நாணிக்கோணும் அரசியல் பாதையில் தான் கூட்டமைப்பின் மாகாண அரசு செல்லப் போகிறது என்றால், ஏன் இவர்களுக்கு வாக்களித்தோம் என்ற சலிப்பே மக்களிடம் ஏற்படும்.
இந்தச் சலிப்பு பலமடையும் போது, இந்தமுறை வெற்றிலை கடாசப்பட்ட நினைவில் கொண்டிருக்க வேண்டியது ஒவ்வொரு அரசியல்வாதியினதும் கடமை.
இப்போது வடக்கு மக்கள் பலரும் விரும்பியோ விரும்பாமலோ
நந்தவனத்தில் ஓர் ஆண்டி
அவன் நாலாறு மாதமாய்
குயவனை வேண்டி
கொண்டு வந்தான்
ஒரு தோண்டி
அதைக் கூத்தாடிக்
கூத்தாடி போட்டுடைத்தாண்டி
என்று பாடி தங்களை நொந்து கொள்கிறார்கள்.
மக்கள் தீர்ப்பின் படி தான் அரசியல்வாதிகள் நடக்கவேண்டுமே தவிர, தங்கள் சுயநலனுக்காக மக்கள் தீர்ப்பை அரசியல்வாதிகள் வளைக்கக்கூடாது. அப்படி வளைக்க முற்பட்டவர்கள் வரலாற்றின் பக்கங்களில் இருந்தே காணாமல் போயிருக்கிறார்கள்.
தங்கள் நம்பிக்கைகள் தகர்ந்து போய்விட்டதோ என்ற சோகத்தில் மீண்டும் ஒப்பாரிகளின் தேசத்தில் உழல தம்மை தயார்படுத்துகிறார்கள் மக்கள். எப்போதும் அவர்கள் சிலுவையேந்திகள்தானே? நீ போருக்கு போனடத்தை
போராடி மாண்டாய் ஐயா
மகனே
பாரத்துவக்கெடுத்தோ
உங்களுக்கு
பயந்தவெடி வச்சானோ
உங்களுக்கு பெரிய துவக்கொடுத்தோ
உங்கள பேசாமல் சுட்டெறிந்தான்
மகனார்
உன்ன சந்தியல கண்டடத்தை
உன்னைபெத்த கறுமி
தலைவெடித்துப் போறனையா
மகனார் நீ கப்பலில வாராயயண்டோ
நாங்க கடலருகில் காத்திருந்தோம்
மகனே நீ
இருந்த இடத்தைப் பார்த்தாலும்
இரு தணலாய் மூளுதையாஈவு
நீ படுத்த இடத்தை பார்தாலும்
பயம் பயமாய் தோன்றுதடா
மகனே
உன்னைப் பெற்ற கறுமி நான்
இங்க உப்பலந்த நாழியைப்போல்
நீ இல்லாம
நாள்தோறும் உக்கிறனே
















