எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடாத்தப்படுவதற்கு கனடா அரசாங்கம் கடும் ஆட்சேபத்தை வெளியிட்டு வருகின்றது. அமர்வுகளில் கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பரே அல்லது வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயர்டோ பங்கேற்க மாட்டார்கள் என நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. வெளிவிவகார அமைச்சரின் பாராளுமன்ற விவகாரச் செயலளார் தீபக் ஓபராய் தலைமையிலான கீழ் மட்டக்குழுவொன்றே அமர்வுகளில் கனடாவை பிரதிநிதித்துவம் செய்யும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு வழங்கி வரும் நிதி உதவியை குறைப்பதற்கு கனடா திட்டமிட்டுள்ளது.
இலங்கையில் பொதுநலவாய நாடுகள் அமர்வுகள் நடத்தப்படுவதற்கான எதிரொலியாகவே இந்த நிதி உதவி குறைப்பு கருதப்படுகின்றது. எதிர்வரும் காலங்களில் பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு வழங்கும் நிதி உதவிகளை கணிசமாக குறைப்பது குறித்து கனடா ஆராய்ந்து வருவதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு நிதி உதவிகளை அதிகளவில் வழங்கும் நாடுகளின் வரிசையில் கனடா இரண்டாம் இடத்தை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ஆண்டு தோறும் கனடா 20 மில்லியன் கனேடிய டொலர்களை பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்காக வழங்கி வருகின்றது.
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என கனடா அறிவித்துள்ளது. கனடாவில் வரிச் செலுத்தும் மக்களின் பணமே இவ்வாறு உதவியாக வழங்கப்படுவதாகவும் அதனை ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்த விரும்புவதாகவும் கனடா அறிவித்துள்ளது.
இதேவேளை, அமர்வுகளில் பங்கேற்பது குறித்து தீர்மானிப்பது தனிப்பட்ட நாடுகளின் சுதந்திரம் என கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சித்ரா வாகீஸ்வரா தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நாடும் அமர்வுகளில் பங்கேற்பது குறித்து தீர்மானிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு முன்னைய அமர்வுகளிலும் 100 வீதம் அனைத்து உறுப்பு நாடுகளும் பங்கேற்றதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றம் நியூசிலாந்து போன்ற நாடுகள் அமர்வுகளில் பங்கேற்பதாக உறுதி செய்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து நான்கு ஆண்டுகளே கடந்துள்ளதாகவும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படவில்லை என இ ங்கை மீது குற்றம் சுமத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் அனைத்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். எமது கோணத்தில் நாம் மிகவும் ஜனநாயக அடிப்படையில் செயற்பட்டு வருகின்றோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
-நன்றி: பிபிசீ
















