இரண்டு முதன்மைக் கட்சிகளும் ஒன்றாக இருந்தால் முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும் என்ற நம்பிக்கையில்தான் உங்களுக்கு எமது ஆதரவை வழங்கினோம். ஆனால் நீங்களோ, எதிரும் புதிருமாக இருந்து, வாக்குறுதிகளில் விலகிச் செல்கின்றீர்கள். நம்பிய மக்களுக்கு மிகப்பெரும் அநீதியை இழைக்கிறீர்கள்‘’ தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க வுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உதிர்த்த கருத்துக்கள் இவை.
தமிழர் தாயகத்தினது ஏக்கங்கள்
கண்ணாடியாகப் பிரதிபலிக்கிறது
சிவசக்தி ஆனந்தனின் உரையில்
நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் உரை, தமிழர் தாயக மக்களின் உள்ளக் கிடக்கைகளை அப்படியே கண்ணாடியாகப் பிரதிபலித்து நிற்கிறது. கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற அரச தலைவர் தேர்தலில், அப்போதைய அரச தலைவர் மகிந்த தோற்கடிக்கப்பட்டு மைத்திரிபால சிறிசேன ஆட்சி பீடம் ஏறுவதற்கு தமிழர் தாயக மக்களின் வாக்குகளே முக்கிய காரணமாக அமைந்தன. இதைப் பல மேடைகளில் வைத்து மைத்திரிபால சிறிசேனவே ஏற்றுக்கொண்டுள்ளார். தமிழ் மக்களின் உதவிக்குப் பதிலாக, தான் பதிலுதவி செய்வேன் என்றும் பலமுறை தெரிவித்துள்ளார் அவர். ஆனால் தமிழ் மக்களின் கோரிக்கைகள் எதையும் அரச தலைவர் நிறைவேற்ற வில்லை. வடக்குக்கு வருவதும் ‘டிமிக்கி’ கொடுத்துவிட்டுச் செல்வதுமாகத்தான் அவர் செய்யும் நன்றிக்கடன் அமைகிறது.
ஏகப்பட்ட கோரிக்கைகளுடன்
தமிழர் தாயகத்தின் மக்கள்
தமிழர் தாயகம் அனுதினமும் போராட்டத்துடன்தான் இன்று பயணித்துக் கொண்டிருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைப்பாடு தொடர்பான வெளிப்பாடு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகள் விடுவிப்பு, வடக்கு – கிழக்கு இணைப்பு, புதிய அரசமைப்பு உருவாக்கம் ஆகியவைதான் தமிழ் மக்களின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன. இவற்றில் ஒன்றில்கூட வடக்கு – கிழக்கு திருப்திப்படும் படியான செயல்வடிவத்தை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன – தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க தலைமையிலான கூட்டு அரசு வெளிப்படுத்தவில்லை. ஒவ்வொன்றிலும் ஏமாற்றத்தையே கொடுத்து வருகிறது.
திருந்த வேண்டும் ரணில்
தனக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துத் தனது பதவியைத் தக்கவைக்க உதவிசெய்ய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குறித்தும், அந்தக் கட்சி பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்கள் குறித்தும் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க இனியாவது சிந்தித்துப் பார்க்க வேண்டும். தன்மீதான நம்பிக்கையில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தந்தது என்பதை உணரவேண்டும். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்டிருந்த ரணில், ‘காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவரும் உயிருடன் இல்லை’ என்று தெரிவித்திருந்தார். ‘வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது சாத்தியமற்றது. கிழக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாக இல்லை. வடக்கில் தமிழர்கள்தான் பெரும்பான்மையினராக வாழ்கிறார்களா என்று தெரியவில்லை’ என்று இந்த வருடம் உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
இவ்வாறாக சிங்கள பேரினவாதத்தின் பார்வைக்கு அஞ்சியும், தனது சிங்கள பௌத்த வாக்குகளைத் தக்க வைப்பதற்காகவும் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டிருப்பதை விடுத்து, நியாயமானது எதுவோ அதை நிறைவேற்ற அவர் முன்வர வேண்டும். ரணிலுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை தோல்வியடையச் செய்ததன் பின்னணியில் கூட்டமைப்பும் அதையே அவரிடம் எதிர்பார்த்து நிற்கிறது. கூட்டமைப்பு பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களின் விருப்பமும், தேவையும் அதுவே.
மக்கள் ஆணையை
மீறுவது அபத்தமே!
கூட்டு அரசு என்பது மக்களின் ஆணை. அதை அதன் ஆயுட்காலம் முடிவதற்கு முன்னர் வலிந்து முடிவுக்குக் கொண்டுவருவதை ஏற்க முடியாது. கூட்டுஅரசு கவிழ்ந்தால் ஏகப்பட்ட விடயங்கள் இயங்கு நிலையில் இருந்து விடுபடும். அவற்றில் முதன்மையானது புதிய அரசமைப்பு உருவாக்கம். புதிய அரசமைப்பின் உருவாக்கமானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வைத்த கோரிக்கைகளான, வடக்கு – கிழக்கு இணைப்பு, திரும்பப் பெறப்பட முடியாத இறுக்கமான பொறிமுறையூடான அதிகாரப் பகிர்வு, நிதித்துறைச் சுதந்திரம் ஆகியவற்றில் இருந்து விலகி நீண்ட நாள்களாயிற்று. எனினும், அதன் உருவாக்க முயற்சியில் இருந்து கூட்டமைப்பு பின்வாங்கவில்லை, கைவிடவில்லை. ஒவ்வொரு தடைகளையும், விமர்சனங்களையும், நெருக்கடிகளையும் புதிய அரசமைப்பின் உருவாக்கத்தைக் கருத்தில்கொண்டே அது கடந்து வருகிறது.
இவ்வாறிருக்க, இந்த அரசைக் கலைத்துவிட அல்லது குலைத்துவிட முயல்வது தமிழர் தாயகத்தைப் பொறுத்த வரையில் அபத்தமானது. ஆக, தனது தலை தப்பிக்க உதவியவர்களின் கோரிக்கைகளுக்கு தலைமை அமைச்சர் செவிசாய்க்க வேண்டும். கூட்டமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும். அதைவிடுத்து வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் என்பதைப்போல் ஏமாற்றுவித்தை காட்ட முயலக்கூடாது, இதற்கு முன்பெல்லாம் கைக்கொண்ட செயற்பாடுகள் போன்று. – Source: uthayan