மகிந்தவின் பொறிக்குள் தமிழ் தலைவர்களும் விக்னேஸ்வரனும் சிக்குவார்களா? ராஜதந்திரத்தில் வெல்வார்களா? – ராஜாபரமேஸவரி

question2இலட்சக்கணக்கான தமிழ் மக்களினதும், ஆயிரக்கணக்கான போராளிகளின் தியாகங்களினாலும் ஒன்றுமே இல்லாத மாகாண சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி கொண்டுள்ளது.

இந்த வெற்றி என்பது தமிழரசுக் கட்சியின் தனித்த வெற்றியோ, இரா சம்பந்தனின் தலைமைத்துவத்திற்கு கிடைத்த வெற்றியோ, சீ.வீ விக்னேஸ்வரன் என்ற முன்னாள் நீதியரசரின் நீதிக்கு 132000 விருப்பு வாக்குகளுடன் கிடைத்த வெற்றியோ அல்லது கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் தனிப்பட்ட கட்சிகளின் அவர்களின் தலைவர்களின் செல்வாக்கிற்கோ கிடைத்த வெற்றிகள் அல்ல.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி என்பது முள்ளிவாய்க்காலின் பேரவலத்த்திற்கும், அந்தப் பேரவலத்திற்கு காரணமானவர்களுக்கும், தமிழ் மக்களால் கொடுக்கப்பட்ட அவர்களால் இன்று கொடுக்கக் கூடிய அதி உட்சமான எதிர்ப்பு உணர்வுகளின் வெளிப்பாடு என்பதனை இலங்கை அரசியலை விளங்கிக் கொள்பவர்கள் எவரும் புரிந்து கொள்ள முடியும்.

இத்தகைய சூழலில் இன்று சர்வதேசத்தின் கடுமையான நெருக்குதல்களுக்கு உள்ளாகியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அந்த நெருக்குதல்களில் இருந்து மீள கூட்டமைப்பின் கயிறைப் பற்றிக்கொள்ளும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக அரசாங்கத்திற்கு மிகவும் நெருக்கமான தரப்புகளில் இருந்து தெரிய வருகிறது.

ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் இலங்கைப் பயணம், அதன் பின்னரான அவரது வாய்மொழி மூல அறிக்கை அதனைத் தொடர்ந்து அமரிக்கா, பிரிட்டன், கனடா முதலான நாடுகளின் கடுமையான அறிக்கைகள் என்பன இலங்கையை கடுமையான சிக்கலில் மாட்டியுள்ளன. கூடவே எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னதாக இலங்கை இறுதியுத்தத்தில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச நியமங்களுக்கு ஈடான விசாரணை, குற்றம் புரிந்தவர்களுக்கான தண்டனை, உருப்படியான மீள் குடியேற்றம், வடக்கு கிழக்கின் இராணுவ பிரசன்னத்தை குறைத்தல், உள்ளிட்ட சர்வதேசத்தின் பல்வேறு நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் மகிந்த சகோதர அரசாங்கம் விளங்குகிறது.

ஆயின் வழமை போலவே போலியான உத்தரவாதங்களிலும், பொய்யான வாக்குறுதிகளிலும் மயங்கி தமது கயிற்றை விழுங்கும் தமிழ்த் தலமைகளுக்கு கயிறு கொடுப்பதே, இவற்றில் இருந்து மீள மிகவும் இலகுவான வழி என்பதனை உலக ராஜதந்திரங்களுக்கே சவால் விடும் மகிந்த அரசாங்கம் நன்கு விளங்கிக்கொண்டு உள்ளது.

ஏற்கனவே ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட போது முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரிடம் கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ஸ ‘ நீங்கள் தான் வடமாகாண சபைத் தேர்தலில் வெல்வீர்கள் என்பது எனக்கு தெரியும் அந்த வெற்றியை எப்படி எதிர்வரும் ஜெனிவாவிற்கு துரும்புச் சீட்டாக பயன்படுத்துவது என்பது எனக்கு தெரியும்’ எனக் கூறினாராம். அந்தக் கூற்று இப்போது நடக்கும் செயல்களைப் பார்க்கும் போது உண்மையானதாக அமையுமோ என்ற பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

அண்மையில் இலங்கைக்கு பயணத்தை மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்சித் ஜனாதிபதியை சந்தித்த போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அருகிருந்தார். கடந்த மாகாண சபைத் தேர்தலில் கற்றுக்கொண்ட பாடத்தினால் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கயன் தரப்பையோ, கீதாஞ்சலி அம்மாவையோ நம்பிப் பிரயோசனம் இல்லை என்றுணர்ந்த மகிந்த ராஜபக்ஸ சகோதரர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே கதி என மீண்டும் அவரைப் பற்றிப் பிடித்துள்ளனர்.

அந்த சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ஸ ‘ மாவட்ட அபிவிருத்தி அமைச்சர்களை நான் நியமினம் செய்யப் போகிறேன். வட மாவட்டங்களின் அபிவிருத்தி அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவே விளங்குவார். எனவே அவரும் சீவீ விக்னேஸ்வரனும் அபிவிருத்திக்கான இணைத் தலைவர்களாக செயற்பட வேண்டியிருக்கும்’ எனக் கூறியிருக்கிறார். ஆயின் வடக்கின் அனைத்து அபிவிருத்தி நிதியும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் அரசாங்க அமைச்சரே நேரடியாகக் கையாளும் நிலை உருவாகுவது நிச்சயமாகி உள்ளது.

இன்னுமொரு சம்பவம் அண்மையில் நடந்தேறியிருக்கிறது. அதனை இந்தப் பதிவில் எழுதுவதா? இல்லையா என்ற மனப் போராட்டத்தில் இருந்தேன். எனினும் முள்ளிவாய்க்காலின் பின் இனி பேசாப் பொருளாக எவையுமே இருக்கக் கூடாது, அனைத்து விடயங்களும் மக்களின் கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என உணர்ந்தேன். அதனால் ராஜதந்திரம், இரகசியம் பேணல், மக்கள் நலன் கருதி எல்லாவற்றையுமே ஊடகங்களில் வெளிப்படுத்தக் கூடாது என்பவை எல்லாம் கடந்தகாலங்களில் எம்மைச் சுற்றி உருவாக்கப்பட்ட மாயைகள், அவை தகர்க்கப்பட வேண்டும் என்ற அசையாத நம்பிக்கையுடன் பதிவிடுகிறேன்.

சில நாட்களுக்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவைச் சந்தித்தனர். வடமாகாண முதல்வர் பதவியேற்பு மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்து அந்த சந்திப்பில் உரையாடப்பட்டது. அதில் முக்கியமானது ‘பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவவை சந்திக்குமாறும் அவர் கூட்டமைப்பு மற்றும் சீ.வீ. விக்னேஸ்வரன் ஆகியோர் குறித்து தவறான அபிப்பிராயங்களை கொண்டு இருக்கிறார், அதனால் நீங்கள் முக்கியமாக அவரைச் சந்திக்க வேண்டும்’ என மகிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார். அதனை ஏற்றுக் கொண்ட இரா சம்பந்தன் மற்றும் எம். ஏ சுமந்திரன் ஆகியோர் பாதுகாப்புச் செயலரை முக்கியமான இடம் ஒன்றில் முக்கிய பிரமுகர் முன்னிலையில் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பில் வடமாகாண முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரன் இருந்தாரா? ஏன்பதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

இதன்போது பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஸ கருத்து தெரிவிக்கையில் ‘ நான் – நாம் இயன்றவரை வடமாகாண சபையுடன் இணைந்து செயற்படவே விரும்புகிறோம். அதனால்த்தான் உங்களை சந்திக்க விரும்பினேன். வடமாகாண சபை உத்தியோகபூர்வமாக செயற்பட தொடங்கியவுடன் வடக்கின் பிரதான கட்டளைத் தளபதிகள், காவற்துறைமா அதிபர்கள், முக்கிய அதிகாரிகளுடனான சந்திப்பை ஏற்பாடு செய்கிறேன். எதிர்காலத்தில் மாகாண சபையுடன் எவ்வாறு இணைந்து தொழிற்படுவது என்பது பற்றி பேசுவோம்’ என தெரிவித்துள்ளார்.

இப்படியான முன்னகர்வுகள் ஒருபுறம் தொடர ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தனக்கு மிக நெருங்கிய ஒருவரிடம் நேரடியாகக் கூறாமல் கூறிய விடயம் மிக மிக முக்கியமானது. ‘ கொமன்வெல்த் நாடுகளின் மகாநாடு, எதிர்வரும் 2014 ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டம், அதற்கு முன்னராக வழங்கப்பட்ட காலக்கெடு, அமெரிக்காவினால் கொண்டுவரப்படலாம் என எதிர்பாரக்கப்படும் கடுமையான அறிக்கை இவை எல்லாவற்றையும் கடந்த பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளில் கண்டு பிடிக்கப்படும் ஓட்டைகளை வைத்து ஒரு வருடத்தில் மாகாணசபையை கலைத்து விடுவதன் மூலம் தெற்கில் ஏற்பட்ட கடும்போக்காளர்களின் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு 2014 அரசாங்கத் தேர்தல்களிலும் பாரிய வெற்றியைப் பெற முடியும்’ என்ற கருத்துப்பட ஒரு கருத்தை வெளியிட்டு உள்ளார்.

இந்த மிக நுண்ணிய அரசியல் நகர்வுகளை காய்நகர்த்தல்களை முன்னெடுக்கும் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கமும் அதன் ஆலோசகர்களும் அதற்கு ஏற்றதாக அதி முக்கியமான ராஜதந்திர நகர்விலும் களமிறங்கியுள்ளதாக தெரிய வருகிறது. எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டில் வடக்கின் முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரன் தலைமையில் வடமாகாண அமைச்சர்களை கலந்துகொள்ள வைக்கும் முயற்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.

வடக்கின் அபிவிருத்திக்கு இந்த நாடுகளின் ஆதரவைப் பெறலாம் என்ற வாக்குறுதிகளுடன் இவர்களை கலந்துகொள்ளச் செய்தால் உலக நாடுகளின் கொதிப்பையும் வாயையும் அடைக்க முடியும் என இலங்கை அரசாங்கத்தின் ஆலோசகர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதனால் அந்த முயற்சியில் அரசியல் காய் நகர்த்தல்களை ஆரம்பித்துள்ள அரசாங்கம் இதன் மூலம் இந்தியப் பிரதமரையும் கலந்துகொள்ள வைப்பதில் இந்தியாவுக்குள் ஏற்படும் சலசலப்புகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்க முடியும் என உறுதியாக நம்புகிறது. இது குறித்தும் இரகசியப் பேச்சுவார்த்தைகளை, ஏற்கனவே கூட்டமைப்பின் தலைமையுடன் அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்பினர் ஆரம்பித்து உள்ளனர். அரசாங்கத்தின் இந்த கோரிக்கையையும் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்வதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக அரசாங்கத்தின் உள்ளகத் தகவல்கள் கூறுகின்ற போதும் கூட்டமைப்பு இதுபற்றி எதுவுமே நடக்காத தோற்றத்தில் மௌனித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, அவரது சகோதரர்கள், அவர்தம் ஆலோசகர்கள் யாவரும் வடக்கில் ஏற்பட்ட தமது கடும் தோல்வியில் இருந்தும், சர்வதேசத்தின் பொறியில் சிக்கித் தவிக்கும் பரிதாப சூழலில் இருந்தும் மீளுவதற்கான தந்திரோபாயங்களையும், மூலோபாயங்களையும் வகுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அரை நூற்றாண்டாக ஆரம்பத்தில் அகிம்சையிலும், பின்னர் 3 தசாப்தங்கள் ஆயுத வழியிலும் போராடி, சொல்லொனாத் துயரங்களையும், விலைமதிப்பற்ற இழப்புக்களையும், இறுதியில் முள்ளிவாய்க்;காலையும், நந்திக் கடலையும் தமது குருதியாக மாறிய தமிழ் இனத்தின் தலைமைகளாக சொல்லிக் கொள்வோர் போடும் அரசியல் பித்தலாட்டங்களை எப்படி கூறுவது?

போனஸ் ஆசன ஒதுக்கீட்டிலும், அமைச்சரவைப் பங்கீட்டிலும், தமது கட்சிக்குள்ளேயே தாம் விரும்புவோருக்கு அமைச்சுக்களை கோருவதும், ஒருவரை ஒருவர் ஓரம் கட்டுவதிலும் இனிவரும் காலத்தையும் கொல்வதற்கு கங்கணம் கட்டி நிற்கிறார்கள்.

கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சிதான் தாய்கட்சி என்பதனை நிறுவுவதற்காகவும் முன்நாள் ஆயுதம் தாங்கிய விடுதலை இயக்கங்களை இல்லாது ஒழித்து கறைபடியாத படித்த உயர்குழாமே தமிழ் அரசியலை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்பதற்காகவும் காலத்தை வீணடித்து எதிரியின் வலையில் சிக்கி மீண்டும் அப்பாவித் தமிழ் மக்களை அனாதைகளாக்க துணைப்போகப்போகிறார்கள்.

இதில் மிகப் பரிதாபமான நிலையாக இருப்பது ஆரம்பத்தில் கடும் தமிழ்த் தேசிய தீவிர அரசியல் செயற்பாட்டாளர்களாக இனம் காணப்பட்டு பாராளுமன்ற அரசியலில் இணைந்த பின்பும் அதே நிலைப்பாட்டில் இருப்பதாக காட்டிக் கொள்ளும் கிழக்கின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும்;, வன்னியின் காவலனாக உருவாகியுள்ள யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் போன்றோரும், தற்போதய மகாகாண சபை உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் யாழ் மூத்த உறுப்பினர் முதலானோரும், தாமே தமிழரசுக் கட்சியின் அதி சிறந்த விசுவாசிகள் என்பதனை நிரூபிக்க கூட்டமைப்பில் உள்ள தற்போதைய அரசியல் கட்சிகளும் முன்நாள் ஆயுதம் தாங்கிய இயக்கங்களுமான தரப்பினரை தூற்றி இல்லாது ஒழிக்கும் நடவடிக்கையிலேயே தமது முழுநேரத்தையும் செலவிடுகின்றனர். (காலத்தின் தேவை கருதி இந்த விடயத்தை இங்கு குறிப்பிடுவதற்கு சம்பந்தப்பட்டவர்களிடம் வருத்தத்தை தெரிவிக்கிறோம்)

இவை இப்படித் தொடர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள் முரண்பாடுகளை கூர்மையடைச் செய்வதற்கான அனைத்து வழிமுறைகளையும் தேர்தலுக்கு முன்பிருந்தே அரசாங்கம் ஆரம்பித்து இருக்கிறது. அதற்காக ஐக்கியதேசியக் கட்சியில் போட்டியிட்ட அரசாங்கத்திற்கு மிக நெருக்காமான சிலரை தமிழரசுக் கட்சி அல்லாதவர்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் மகிந்த சகோதரர்கள் களமிறக்கினர். (இதற்கான ஆதராங்கள் உண்டு)

இப்போதும் கூட்டமைப்பில் உள் முரண்பாட்டை அதிகரித்து அதனை சின்னாபின்னமாக்கும் முயற்சியில் அரசாங்கம் கடுமையாக ஈடுபடுகிறது. அதனை புரிந்து கொள்ளாமல் தமிழரசுக் கட்சியின் தூண்களாக அண்மையில் மேற்கிளம்பியவர்கள் மக்களிடம் அதிக செல்வாக்கை பெற்ற அனந்தியின் எழுச்சியை எப்படித் தடுக்கலாம், மக்களின் அதிக விருப்பு வாக்குகளை பெற்றவர்களில் ஒருவரான சித்தார்த்தனை எப்படி ஓரங்கட்டலாம், சுரேஸ் பிறேமச்சந்திரனை எப்படி இல்லாமல் செய்யலாம், இந்த இருவரிடம் இருந்து செல்வம் அடைக்கலநாதனை தம்பக்கம் எப்படி வளைத்துப் போடலாம், என்ற அனைத்துவிதமான பிரச்சாரங்களில் தமது நேரத்தை செலவிடுகின்றனர். மறுபுறம் ஏற்கனவே அமைச்சுப் பொறுப்புக்களை பெற்றுக் கொண்ட கட்சிகளும் தாம் விரும்பியவர்களுக்கு அமைச்சுப் பொறுப்புக்கள் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் தலமைப் பொறுப்பில் இருந்து விலகுவேன் என ஒரு தரப்பினரும், ஐங்கரநேசனை ஓரங்கட்ட வேண்டும் என மறுதரப்பினரும் முயன்றுகொண்டு இருக்கிறனர்.

தமிழரசுக் கட்சியில் கடும் தமிழ்த் தேசியப் பற்றாளர்களாக இனம்காட்டிக் கொண்டவர்களும், மறு முனையில் முன்னாள் விடுதலை இயக்கங்களாக இருந்து பின்னர் அரசியல் கட்சிகளாக இயங்கத் தொடங்கியோரும் மோதிக் கொண்டிருக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும், வட மாகாண சபையின் தலைமையும் தமது முடிவுகளை கட்சிதமாக எடுத்துக்கொண்டும் நிறைவேற்றிக் கொண்டும் இருக்கப் பொகிறார்கள். அங்கே அவர்களை கேள்வி கேட்பதற்கோ, விமர்சிப்பதற்கோ, சரியான வழியில் இட்டுச் செல்வதற்கோ இவர்களுக்கு நேரம் கிடைக்கப் போவதில்லை. நேரம் கிடைத்தாலும் வயது முதிர்ந்த தமிழரசுக் கட்சியின் தலைமைகள் ஓய்வுக்குச் செல்ல ஒரு புறத்தில் தீவிர தமிழ்த் தேசிய ஆதரவாளர்களையும் தக்கவைத்துக்கொண்டு மறுபக்கத்தில் தமிழரசுக் கட்சியின் அதனை தலமைகளின் அதி தீவிர விசுவாசிகளாக தம்மை இனம் காட்டும் போதுதான் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்களின் அரசியல் தலைமையை தாம் கைப்பற்ற முடியும் என்று நினைப்பதாலும் தற்போதைய தலைமைகளின் முடிவுகளை கண்டும் காணாமலும் விடுகின்றனர். அல்லது அதற்கு தாம் எதிராக உள்ளதாக ஊடகங்களில் செய்திகளை கசிய விடுகின்றனர்.

இந்த நிலையில் இவ்வாறான செயற்பாடுகளில் உள்ள அனைவரையும் நோக்கி முக்கிய கேள்விகளை முன்வைப்பது தவிர்க்க முடியாதது.

முன்னரும் இப்போதும் தீவிர தமிழ்த் தேசிய பற்றாளர்களாக காட்டிக்கொண்டு குறுகியகாலத்தில் தமிழரசுக் கட்சியின் தீவிர விசுவாசிகளாக மாறிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலுக்குப் பின்னராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையின் நடவடிக்கைகள் குறித்து ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைத்தார்களா? முன் வைப்பார்களா?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய கட்சிகள் தமது கட்சிக்குள் தொடரும் பதவிப் போட்டிகள் குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்களா?

மாகாண சபைத் தேர்தலின் பின் முன்னரை விடவும் கூர்மை அடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முரண்பாடுகளுக்கு உருப்படியான தீர்வைக் காண அனைவரும் முயன்று இருக்கிறார்களா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் வடமாகாண சபையின் தலைமையும் அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொள்ளும் நல்லிணக்கச் செயற்பாடுகளை சர்வதேச நெருக்கடிகளில் இருந்து விடுபடுவதற்கான உத்தியாக அரசாங்கம் மாற்றிக்கொள்ளப் போகிறது என ஏன் கருத முடியாது என கேள்வி கேட்டார்களா? விமர்சித்தார்களா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலமையும் வடமாகாண சபையின் தலமையும் அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொள்ளும் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய சரியான உத்தரவாதங்கள், உறுதிமொழிகள் பெற்றுக்கொள்ளப்பட்டனவா என கேள்வி எழுப்பினார்களா?

கடந்த 2005 ஆம் ஆண்டில் இருந்து ‘என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு ஒத்துழைப்புத் தாருங்கள்’ என விடுதலைப் புலிகளுடன் பேரம் பேசி ஐக்கியதேசியக் கட்சிக்கு தமிழ் மக்களின் வாக்குகள் போவதனை தடுக்க வேண்டும் எனக் வேண்டுகோள் விடுத்ததில் இருந்து கணக்கிட முடியாத உறுதிமொழிகளை எல்லாம் குப்பையில் போட்ட மகிந்தவையும் அவரது அரசாங்கத்தையும் நம்பி கண்ணை மூடிக்கொண்டு நல்லிணக்கம் பேச முற்படும் தமது தலைமையிடம் கேள்வி கேட்டார்களா?

இவ்வாறு கேட்கப்பட வேண்டிய கேளிவிகளை விடுத்து கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளை, அதன் தலைவர்களை, அதன் முக்கிய உறுப்பினர்களை ஓரம் கட்டுவதில், இல்லாமல் செய்வதில், முரண்பாடுகளை மேலும் வளர்க்க எண்ணை ஊற்றுவதில் என்ன லாபம் கிடைக்கப் போகிறது மீண்டும் சொல்கிறோம் பாவம் மக்கள்.

-GTN, ராஜாபரமேஸவரி

Tags: , , ,

Leave a Reply