புதுடெல்லி, சமீபத்தில் ‘24 அக்பர் சாலை’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
இதில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி 2016–ம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் என்று குறிப்பிட்டு இருந்தது. இது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களிடம் அவர் தெரிவித்துவிட்டதாகவும் செய்தி பரவியது.
இந்த தகவல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்திக்கு காங்கிரஸ் மேலிட தலைவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து பேசினார்.
இருவரும் 40 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் ராம்விலாஸ் பஸ்வான் நிருர்களிடம் கூறியதாவது:–
2016–ம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தான் கூறவில்லை என்றும், அரசியலில் இருந்து ஓய்வுபெறும் எண்ணம் இல்லை என்றும் சோனியா காந்தி என்னிடம் தெரிவித்தார்.
2004–ஆம் ஆண்டு பொதுத்தேர்தலைப் போன்று வரும் பாராளுமன்ற தேர்தலிலும், மத சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்று நான் சோனியாவிடம் வற்புறுத்தினேன்.
இவ்வாறு ராம்விலாஸ் பாஸ்வான் கூறினார்.
















