சவேந்திர சில்வாவின் பதவி பறிப்புக்கு சட்டச் சிக்கல் காரணமா…!

ஜெனரல் சவேந்திர சில்வாவின் இராணுவத் தளபதி பதவி பறிக்கப்பட்டதற்கு சட்டச் சிக்கல் ஒன்று காரணமாக அமைந்திருந்ததாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நேற்றைய தினம் வரை ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக பதவி வகித்த போதும் அவருக்கான சேவை நீடிப்பு சட்டரீதியாக வழங்கப்படவில்லை. அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஏதும் இதுவரை வெளியிடப்படவும் இல்லை.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சிடம் ஊடகவியலாளர் லசந்த ருகுணகே இது குறித்து கேள்வி எழுப்பியுள்ள போதும் அதற்கான தெளிவான பதில் கிடைக்கவில்லை.
இந்நிலையில் சட்டரீதியான பதவி நீடிப்பின்றி ஜெனரல் 
சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக பதவியில் நீடிப்பதற்கு எதிராக வழக்கொன்றைத் தாக்கல் செய்ய சட்டத்தரணிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் குழுவொன்று நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
பதவியில் இருந்து நீக்கப்பட்ட சவேந்திர சில்வா

இதனையடுத்தே சட்டச்சிக்கல்கள் வரும் என்ற அச்சம் காரணமாக இராணுவத் தளபதி பதவியில் இருந்து சவேந்திர சில்வா நீக்கப்பட்டுள்ளார்.

எனினும் புதிய இராணுவத் தளபதி விகும் லியனகே இராணுவ நிர்வாகத்தில் அனுபவமற்றவர் மற்றும் இராணுவத்தினர் மத்தியில் கீர்த்தியைக் கொண்டிருக்காதவர் என்ற காரணத்தினால் அவரை பெயரளவு இராணுவத் தளபதியாக வைத்துக் கொண்டு சவேந்திர சில்வாவே தொடர்ந்தும் இராணுவத்தை வழிநடத்தவுள்ளதாகவும் குறித்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் புதிய இராணுவத் தளபதி விகும் லியனகே ஆகியோரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பணியாற்றிய கஜபா படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!