வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமானதாகும். துரதிஷ்டவசமாக நாம் கிழக்கு மாகாண சபையை இழந்துள்ளோம். தற்பொழுது கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் மக் கள் அதன் தாக்கத்தை உணர்ந்துள்ளனர். எனவே இனிவரும் காலங்களிலாவது நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டும் என வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திலுள்ள மஸ்ஜித் முஹாம்தியாவில் நடைபெற்ற முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் உரையாற்றுகையில்,
தந்தை செல்வா காலத்திலிருந்து தலைவர் சம்பந்தன் வரையுள்ள காலத்தில் முஸ்லிம் மக்களுக்காக முஸ்லிம் அரசியல்வாதிகள் குரல் கொடுக்கத் தயங்கியபோது தமிழ்த் தலைவர்களே குரல் கொடுத்து வந்துள்ளனர்.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில்கூட இன்று முஸ்லிம் மக்களின் உரிமைப் பிரச்சினைகள் பேசப்பட்டுள்ளன. தற்பொழுது வடமாகாண சபையில் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளைக் கண்டறிந்து அதற்கான தீர்வைக் காண்பதற்காக அஸ்மின் ஐயூப் நியமிக்கப்பட்டுள்ளார். அங்கத்தவர்கள் அனைவரும் அமைச்சின் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு உதவியாளர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
அதேபோல் முஸ்லிம் விவகாரங்களை நிறைவேற்றுவதற்குரிய பொறுப்பை முஸ்லிம் பிரதிநிதிகளுக்குக் கொடுத்துள்ளோம். இறைநம்பிக்கை மனிதாபிமானத்துடன் மதத்தின் அடிப்படையில் இன்று இரு இனங்களும் ஒன்றிணைந்துள்ளமை வரவேற்கத்தக்கது என்றார்.
இதேவேளை முதலமைச்சர் விக்கினேஸ்வரன், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோர் யாழ்.குடாநாட்டிலுள்ள பாசையூர் புனித அந்தோனியார் தேவாலயம், தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயம், குப்பிளான் சிவபூமி ஆச்சிரமம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆகிய ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் இ.சரவணபவன், சோ.சுகிர்தன் ஆகியோர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















