தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது கொள்கையில் இருந்துகொண்டுதான் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயலும் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இருக்கக்கூடாது. மக்களின் உணர்வலைகள் தமிழ் தேசியத்தின் ஒற்றுமைக்கான வெளிப்பாடாகவே இருந்தது. எனவே, அதை வெளிப்படுத்தும் வகையிலேயே எமது செயற்பாடுகள் அமைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
கூட்டமைப்பின் சத்தியப்பிரமாணம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
வட மாகாண சபையில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்திருக்கின்றது. ஆனால், கூட்டமைப்பின் கொள்கையில் இருந்து சற்றும் விலகவில்லை என்பதை அனைத்து தமிழ் மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
வட மாகாண சபை தேர்தலின் சத்தியப்பிரமாண நிகழ்வானது மூன்று கட்டங்களாக நடைபெற்றன. முதலாவது நிகழ்வு ஜனாதிபதியின் முன்னிலையில் அலரி மாளிகையிலும் இரண்டாவது நிகழ்வு யாழ்ப்பாணத்தில் வீரசிங்கம் மண்டபத்திலும் மூன்றாவது நிகழ்வு முள்ளிவாய்க்காலிலும் இடம் பெற்றுள்ளது.
எந்த இடத்தில் சத்தியப்பிரமாணம் எடுக்கின்றோம் என்பது முக்கியமல்ல, அதில் எழுதப்பட்டிருக்கும் வசனங்கள் அனைத்தும் ஒரே விடயம்தான் என்பதனை மாத்திரம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
முள்ளிவாய்க்காலில் தான் இறுதிக்கட்டப்போர் இடம் பெற்றது. இந்த இடத்திலே எமது மக்களும் போராளிகளும் தங்களது உயிர்களை மாய்த்தார்கள். எனவே, இப்பிரதேசம் ஒரு புனிதப்பிரதேசமாக பார்க்கப்பட வேண்டிய தொன்றாகும். எனவே, இங்கு சத்தியப்பிரமாணம் எடுப்பதென்பது பொருத்தமான நடவடிக்கையாகத் தெரியவில்லை.
இதனை விடுத்து இங்கு சத்தியப்பிரமாணம் செய்வதென்பது முள்ளிவாய்க்காலில் சத்தியப் பிரமாணம் எடுப்பவர்கள் துரோகிகளாகவும் அல்லது ஏனைய இடங்களில் சத்தியப்பிரமாணம் எடுத்தவர்கள் முட்டாள்களாகவும் யாரும் கருதிவிடமுடியாது. எமது மாவீரர்கள் எந்த இலட்சியத்திற்காக மரணித்தார்களோ அந்த இலட்சியத்தை கொச்சைப்படுத்தும் அளவிற்கு யாரும் செயற்பட முனையக்கூடாது.
வடமாகாண சபை தேர்தல் பிரசாரங்களில் அனைவரும் மாவீரர்களின் தியாகங்களை மேடையில் வலியுறுத்தித்தான் மக்களிடம் வாக்குக் கேட்டார்கள். மக்கள் வாக்களித்தது வெறுமனே வட மாகாண ஆட்சியமைப்பதற்கு மாத்திரமல்ல. மாறாக, வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணத்திலே தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அனைத்து உரிமைகளையும் பெற்று சுதந்திரமாக வாழ்வதற்கே ஆகும்.
இறுதிக் கட்டப் போராட்டத்தில் இலட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்றுகுவித்த அரசாங்கத்திற்கு தமக்குள்ள ஒரே ஆயுதமாகவுள்ள ஜனநாயக ரீதியான வாக்குச்சீட்டு மூலமே பாரிய பதிலடியைக் கொடுத்தார்கள். இதனைப் புரியாத சிலர் அமைச்சுப் பதவிகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் கட்சிக்குள்ளே முட்டி மோதிக் கொண்டிருப்பதும் ஊடக மாநாடுகளை வைத்து ஊடகங்களில் ஏட்டிக்கு போட்டியான அறிக்கைகளை விடுவதும் ஒட்டு மொத்த விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவதும் மலினப்படுத்துவதுமான செயற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது என்றார்.
















