நியூஸிலாந்தின் மிகப் பிரபலமான றக்பி வீரரும் குத்துச்சண்டை வீரருமான சொனி பில் வில்லியம்ஸ், பாம்பொன்றைக் கண்டு அலறியடித்து ஓடிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
28 வயதான சொனி பில் வில்லியம், தற்போது றக்பி லீக் உலகக்கிண்ண போட்டிகளுக்கான றக்பி குழாமில், நியூஸிலாந்து அணியினருடன் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அண்மையில் அவர், தனது அணி வீரரான பிராங் போல் சகிதம் மருத்துவ அறையொன்றில் மசாஜ் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த பாம்பொன்றைக் கண்டு திகைப்படைந்தார். சுமார் ஒரு மீற்றர் நீளமான அப்பாம்பு தான் இருந்த பக்கமாக திரும்பியபோது பீதியடைந்த சொனி வில்லியம்ஸ், மசாஜ் மேசையிலிருந்து எழுந்து வெளியே ஓடத் தொடங்கினார்.
அவ்வேளையில் தான் உள்ளாடை மாத்திரமே அணிந்திருந்ததைப் பற்றி சொனி வில்லியம்ஸ் கவலையடையவில்லை. பாம்பிடமிருந்து தப்பித்தால் போதும் என எண்ணியுள்ள அவர் மிக வேகமாக ஓடிய காட்சி கமெராக்களில் பதிவாகியுள்ளன.
‘சொனி வில்லியம்ஸ் அப்போது 90 நிமிட மசாஜ் சிகிச்சைக்கு மத்தியில் இருந்தார். ஆனால் பாம்பைக் கண்டவுடன் அவர் பாய்ந்து ஓடத்தொடங்கினார்’ என நியூஸிலாந்து றக்பி அணியின் பேச்சாளர் கலே வில்சன் தெரிவித்துள்ளார். றக்பி அரங்கில் ஆக்ரோஷமாக மோதும் வீரர்களில் ஒருவரான சொனி பில் வில்லியம்ஸ் பாம்பைக் கண்டு பயந்தோடியதைக் கண்டு அணி வீரர்கள் சிரிக்கத் தொடங்கினர்.
தனது கட்டுடல் மூலமும் விளையாட்டுத் திறமைகள் மூலமும் மில்லியன் ரசிகர்களைக் கவர்ந்தவர் சொனி பில் வில்லியம்ஸ்.
உலகின் மிகப் பழைய றக்பி சம்மேளனமான றக்பி யூனியன் மற்றும் அதிலிருந்து பிரிந்த றக்பி லீக் ஆகிய இரு அமைப்புக்களின் போட்டிகளிலும் விளையாடியவர் இவர். அவுஸ்திரேலியாவின் சிட்னி ரூஸ்டர்ஸ் கழகத்தின் சார்பிலும் இவர் விளையாடியுள்ளார்.
2004 ஆம் ஆண்டு முதல் தொழிற்சார் றக்பி போட்டிகளில் விளையாடி புகழ் பெற்ற அவர் 2009 ஆம் ஆண்டு தொழிற்சார் குத்துச்சண்டைப் போட்டிகளிலும் களமிறங்கினார். இதுவரை 6 தடவை அதிபார தொழிற்சார் குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபற்றி 6 போட்டிகளிலும் அவர் வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவற்றில் 3 வெற்றிகள் நொக் அவுட் முறையில் பெறப்பட்டவையாகும்.
நியூஸிலாந்து தொழிற்சார் குத்துச்சண்டை சங்கத்தின் அதிபாரப் பிரிவு நடப்புச் சம்பியனாக விளங்கும் அவர்இ கடந்த பெப்ரவரி மாதம் தென்னாபிரிக்க வீரர் பிராங்சுவா போத்தாவை தோற்கடித்து உலக குத்துச்சண்டை சங்கத்தின் (டபிள்யூ.பி.ஏ.) சர்வதேச அதிபார சம்பியன் பட்டத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.
றக்பி யூனியன் நடத்தும் உலகக்கிண்ணப் போட்டிகளில் 2011 ஆம் ஆண்டு சம்பியனாகிய நியூஸிலாந்து அணியில் விளையாடியவர் சொனி பில் வில்லியம்ஸ்.
தற்போது அவர் றக்பி லீக் அமைப்பு நடத்தும் உலகக்கிண்ணப் போட்டிகளுக்கான நியூஸிலாந்து அணியில் அவர் பயிற்சி பெற்று வருகிறார். இப்போட்டிகள் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளன.
அதன்பின் 2015 ஆம் ஆண்டு றக்பி யூனியன் அமைப்பு நடத்தும் உலகக் கிண்ண றக்பி போட்டிகளில் நியூஸிலாந்து அணி சம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொள்ள உதவ விரும்புவதாகவும் 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளிலும் நியூஸிலாந்து சார்பில் விளையாட விரும்புவதாகவும் சொனி பில் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
















