66 ஆண்டுகளுக்கு பின்னர் நகம் வெட்டிய இந்தியர்

நகம் வளர்ப்பதில் கின்னஸ் சாதனை படைத்த இந்தியர் 66 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக நகம் வெட்டுகிறார்.

மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரை சேர்ந்தவர் 88 வயதான ஸ்ரீதர் சில்லால் என்பவர் கடந்த 1952ஆம் ஆண்டுமுதல் தனது இடது கையில் நகத்தை வெட்டாமல், நீளமாக வளர்க்க ஆரம்பித்தார்.

இதன் விளைவாக கடந்த 66 ஆண்டுகளில் அவரது இடது கையில் உள்ள ஐந்து விரல்களிலும் வளர்ச்சி அடைந்துள்ள நகங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி தற்போது 909.6 சென்றீ மீற்றர்களாகவுள்ளது. இதில் அவரது இடது கை கட்டை விரலில் உள்ள நகத்தின் வளர்ச்சி மட்டும் 197.8 சென்றீ மீற்றராகும்.

உலகிலேயே மிக நீளமான நகத்தை கொண்டவர் என்ற முறையில் கடந்த 2016ஆம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் ஸ்ரீதர் சில்லால் இடம்பிடித்தார்.

இந்நிலையில், 66 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ஸ்ரீதர் அமெரிக்காவில் இன்று தனது கை நகங்களை வெட்டுகிறார்.

அமெரிக்காவின் பிரபலமான ‘ரிப்லி’ஸ் பிலிவ் இட் ஓர் நொட்’ ( Ripley’s Believe It or Not!) என்னும் தொலைக்காட்சி தொடர் உலகில் அதிசயமான செயல்கள் மற்றும் சாதனைகள் புரிந்தவர்களின் பதிவுகளை ஒளிப்பரப்பி வருகிறது.

’நம்பினால் நம்புங்கள்’ என்னும் பொருள்படும் இந்த தொடருக்கான நிகழ்ச்சிகளை தயாரிக்கும் அலுவலகம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் ஆச்சரியப்பட வைக்கும் அரியப் பொருட்களை சேமித்து வைக்கும் அருங்காட்சியகமும் உண்டு.

கடந்த 66 ஆண்டுகளாக பேணிப் பராமரித்து, பாதுகாத்து வளர்த்த நகத்தை இந்த அருங்காட்சியகத்தில் நிரந்தரமாக வைத்து அழகுப்பார்க்க விரும்பிய ஸ்ரீதர், சமீபத்தில் இதற்கான அனுமதியை ‘ரிப்லி’ஸ் பிலிவ் இட் ஆர் நாட்’ நிகழ்ச்சி தயாரிப்பாளர்களிடம் பெற்றார்.

இதையடுத்து, இந்தியாவில் இருந்து விமானம் மூலம் நியூயோர்க் நகரை சென்றடைந்துள்ளார் ஸ்ரீதர் சில்லால்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!