விடைபெறும் ஏவிளம்பி வருடமானது, சொல்லத்தக்கவாறு எந்தவொரு சாதனையையும் எமக்குத் தராமல், பிறக்கின்ற விளம்பி வருடத்திற்கு தனது சித்திரைப் புதுவருட நல் வாழ்த்துக்களைத் தெரிவித்து, தான்முடிக்க வேண்டிய அரைகுறை வேலைகளையும் ஒப்படைத்துத் தன்னிருப்பிடம் செல்கிறது.
பொதுவாகவே நாம் இரண்டாவது பட்சமாகித் தாமத மாகிவிட்டோம். இனிமேலும் அவ்வாறு பின்தள்ளப் பட்டு, புறம்தள்ளப்படுவதைப் புதுவருடமானது அனுமதிக்காது தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ ஆனவை அனைத்தையும் செய்தேயாக வேண்டும். அதற்காக விளம்பியே உன்னை வரவேற்கின்றோம்.
முற்றத்தில் கோலமிட்டு, விளக்கேற்றி, பொங்கலிட்டு, சூரிய வணக்கம் செய்து கோமாதாக்களின் வருகையிலே உன்னைப் புகழ்ந்தேத்தி, 365 நாளும் அற்புதம் செய்து நீயோ அதிசயமாக வேண்டும் என நாம் பணிந்து உன்னைப் போற்றுகின்றோம். ஆகவே நீ வெல்வது நிச்சயம்.
விடைகாண வேண்டும் நீ
அற்ப சொற்ப முன்னேற்றம் தென்பட்டாலும் உருப்படியான தீர்வு இதுவரை பேசப்படவில்லை. எழுதப்படவேயில்லை. மூவின மக்களும் நல்லிணக்கமாக வாழவேண்டுமாயின், இலங்கை ஒரு மதச் சார்பற்ற நாடாக மிளிர வழிசமைக்கப்பட வேண்டும்.
ஒரு சாரார் மட்டும் இந்த நாட்டின் அரச தலைவராகவும், தலைமை அமைச்சராகவும் ஆட்சிப் பொறுப்பில் வரும்போது, மூவின மக்களும் நல்லிணக்க அடிப்படையில் அப்பதவிகளுக்குப் பொறுப்பாகும்படி சட்டயாப்பு திருத்தப்படுவது மிகமிக முக்கியமானதே.
விளம்பியே! போரைக் காரணங்காட்டி பறிக்கப்பட்ட நிலங்கள், அழிக்கப்பட்ட வீடுகள், நாசமாக்கப்பட்ட தமிழர்தம் வாழ்வு, காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலநிலை, பெண் தலைமைத்துவக் குடும்பங்க ளின் பரிதாபநிலை, பெற்றோரை இழந்த பிள்ளைகளின் ஏதிலி நிலை, பிள்ளைகளை அகாலப்படுத்திய பயங்கரவாதச் சட்ட ஆதிக்கநிலையில் மௌனிக்கப்பட்ட அடிமைநிலை, ஆயிரம் விகாரைகளை அவசர அவசரமாக வடபகுதியில் அமைக்கும் அபாயநிலை, மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் மணலாறு வெலிஓயா என பேரினக் குடியேற்றமாய் மாறிவிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் சோகநிலை, நாளிலும் பொழுதிலும் பௌத்த நாடாக மாறிவிடுகின்ற பின்னணியில் இந்து, முஸ்லிம் மக்களது கையாலாகாத அபாக்கிய நிலை, கண்முன்னாலேயே துடிக்கத் துடிக்க பலாத்காரம் செய்யப்படுகின்ற பெண்களுக்கான வன்முறைக் கொடூர நிலை, அப்பாவையே தெரிய முடியாத பிறந்த சிசுக்களைக் கொலை செய்கின்ற அமானுஸ் அக்கிரம நிலை, பொதுச் சொத்துக்களில் சவாரிவிடுகின்ற அதர்மநிலை, கோவில் கட்டுவதுதான் சாமிக்கு விருப்ப மென்று இருப்பதையே இடித்து இடித்து உள்ள தெய்வீகத் தன்மையைக் குலைத்துவிடும் அதிகாரநிலை, கன்றுத்தாச்சி மாடுகளையே இறைச்சிக்காக வெட்டிச் சரிக்கின்ற துரோகத்தனமான துர்பாக்கிய நிலை, ஆறு இலட்சம் வாக்குகள் தேங்கிக் கிடக்கின்ற நீதிக்காகப் போராடும் அரசின் நிலை, ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சைக்காகச் சின்னஞ்சிறு பாலகர்களை வதைக்கும் கொடுமைக்கு விடையில்லாத வினாக்களின் தொந்தரவான அநியாயநிலை, எல்லாவற்றிற்கும் மேலாக வீதிகளில் விதிகளைச் சுமக்கும் யம சங்காரநிலை, வியர்வை சிந்தி எல்லோரின் பசியைப் போக்குகின்ற விவசாயிகளின் கண்ணீருக்குத் தொடர்ந்தும் தீர்வு காணப்படாத நிலை’ – என ஒட்டுமொத்தமான பெரிய சுமையை நீ சுமக்கப்போகி ன்றாய்.
விளம்பி என்ற சொல்லுக்கும் மேற்போந்த பொறுப்புக்களுக்கும் விடைகாணவே நீ வரவேண்டும். மேலும் மக்கள் அனைவரும் சரிநிகர் சமானமாக வாழவும், அதிகாரங்களோடு மாகாணங்கள் சுயாட்சி பெறவும், ஆயிரம் தொழிற்சாலைகளை நோக்கிய தூரநோக்கில் நிதியிடவும் விளம்பி எனும் சித்திரைப் புத்தாண்டே நீ வரமருளப் பிறந்து வாராய்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!