சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி (வயது 52), கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, தனது கட்சிக்காக தீவிர பிரசாரம் செய்தார். ராகுல் அவதூறு பேச்சு அப்போது அவர் கர்நாடக மாநிலம் கோலாரில் 2019, ஏப்ரல் 13-ந் தேதி நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பேச்சு சர்ச்சையானது. அவர், ஊழல் செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பி ஓடிய நிரவ் மோடி, லலித் மோடி ஆகியோருடன் பிரதமர் மோடியையும் சேர்த்து அவதூறாகப் பேசினார். இது தொடர்பான வீடியோ அப்போது வெளியாகி வைரலானது.

ராகுல் காந்தியின் அவதூறு பேச்சுக்கு எதிராக குஜராத் மாநில முன்னாள் மந்திரியும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான புர்னேஷ் மோடி, சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் 4 ஆண்டு கால விசாரணைக்குப் பின்னர், கடந்த மாதம் 23-ந் தேதி தீர்ப்பு வருவதாக அறிவிக்கப்பட்டது. தீர்ப்புக்காக அன்றைய தினம் சூரத் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். அவர் இந்திய தண்டனைச்சட்டம் பிரிவுகள் 499, 500 ஆகியவற்றின்கீழ் குற்றவாளி என கண்டு, அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு எச்.எச்.வர்மா அதிரடியாக தீர்ப்பு கூறினார்.

மேலும், அந்தத் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய ஏதுவாக அவருக்கு ஜாமீன் வழங்கியதுடன், தண்டனையை ஒரு மாத காலத்துக்கு நிறுத்தியும் வைத்தார். இந்தத் தீர்ப்பு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எம்.பி. பதவி பறிப்பு குற்ற வழக்கில் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. 2 ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கு தண்டிக்கப்படுகிறபோது, அவர்களது பதவி உடனே பறிக்கப்பட வேண்டும் என்று அரசியல் சட்டம் பிரிவு 102 (1) (ஈ) உடன் இணைந்த 1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8 கூறுகிறது.

அதன்படி, 2 ஆண்டு தண்டனை தீர்ப்பு வந்த சூட்டோடு சூடாக, மறுநாளிலேயே ராகுல் காந்தியின் வயநாடு தொகுதி எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. தாமதம் இந்த தண்டனை தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி உடனடியாக சட்ட நிவாரணம் தேடி மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அது தாமதமாகி வந்தது. உடனடியாக மேல்முறையீடு செய்யாமல், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மத்திய அரசைச் சாடி வந்ததை, பா.ஜ.க.வின் தலைவர்கள் குறைகூறி வந்தனர். இன்று மேல்முறையீடு இப்போது தீர்ப்பு வந்து 11 நாட்கள் ஆன நிலையில், விசாரணை நீதிமன்றத்தின் தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி இன்று (திங்கட்கிழமை) சூரத் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நேரில் மேல்முறையீடு செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுபற்றி அவரது வக்கீல் கிரிட் பன்வாலா கூறும்போது, “ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வதற்காக சூரத் செசன்ஸ் கோர்ட்டுக்கு திங்கட்கிழமை (இன்று) பிற்பகல் 3 மணிக்கு வந்து சேருகிறார்” என தெரிவித்தார். ராகுல் காந்தி சூரத் வந்து சேருகிறபோது, அங்கு கட்சியின் மூத்த தலைவர்கள் இருப்பார்கள் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடக்கப்போவது என்ன? ராகுல் காந்தி மீதான தண்டனைக்கும். தண்டனை தீர்ப்புக்கும் அப்பீல் கோர்ட்டு தடை கொடுக்காவிட்டால், அவர் 8 ஆண்டு காலத்துக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

ஒரு வேளை அப்பீல் கோர்ட்டில், விசாரணை நீதிமன்றத்தின் தண்டனை தீர்ப்புக்கும், தண்டனைக்கும் தடை வந்து விட்டால், ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பும் நிறுத்தப்படும், அவர் மீண்டும் மக்களவைக்குச் செல்ல முடியும். எனவே இப்போது எல்லோரின் பார்வையும் சூரத் செசன்ஸ் கோர்ட்டின் மீது படிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!