மாவீரர்களுக்கு கல்லறை கட்டக் கோரினால் கைது; கோத்தபாய எச்சரிக்கை

Gotabhaya-Rajapaksaஉயிரோடு வாழும் எந்தவொரு முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க போராளியும் முப்பதாண்டுப் போரில் இறந்தவர்கள் நினைவாக கல்லறைகளை அமைக்கக் கோரினால், கைது செய்யப்படுவார் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாவீரர் துயிலுமில்லங்களைப் புனரமைக்க சாவகச்சேரிப் பிரதேசசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச,

“விடுதலைப் புலிகள், உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கம். அவர்கள் சட்டபூர்வமாக முன்னிலைப்படுத்தப்படும் இடத்தில் இல்லை.

அவர்கள் நினைவாக போர் நினைவுச் சின்னங்களை அமைக்க எவருக்கும் உரிமை இல்லை.யாரேனும் அதைச் செய்வார்களேயானால், கைது செய்யப்படுவர்.

இளைஞர்களுக்குத் தவறாக வழிகாட்ட முற்படும் இவர்கள், ஏனைய முன்னாள் விடுதலைப் புலிகளைப் போலவே, கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுவர்.

வடக்கு மாகாணம் காணி, காவல்துறை அதிகாரங்களைப் பெறவே முடியாது. அது நடைமுறைச்சாத்தியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாணங்களுக்கு காணி அதிகாரங்கள் இல்லை என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ள நிலையில்,வடக்கு மாகாண முதல்வரும், மாகாணசபையும், காணி அதிகாரங்களைப் பெறுவது சாத்தியமில்லை என்பதை உணர வேண்டும்.

ஏனைய மாகாணங்களுக்கு தனியான காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படாத நிலையில், எதற்காக வடக்கு மாகாணசபைக்கு மட்டும் தனியான சிறப்பு காவல்துறை அதிகாரங்களை வழங்க வேண்டும்?

வடக்கு மாகாணசபைக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படாது என்று சிறிலங்கா அதிபரே கூறியுள்ளார். காவல்துறை அதிகாரங்களில் எதற்கு வடக்கு மாகாணசபைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்?

சட்டம் ஒழுங்கு, காவல்துறையை கையாளும் பொறுப்பு மத்திய அரசுக்கும், சிறிலங்கா அதிபருக்குமே உள்ளது. சட்டம் ஒழுங்கை பேணுவதற்கும் குற்றச்செயல்களைத் தடுப்பதற்கும் வடக்கு மாகாணசபை காவல்துறைக்கு உதவலாம்.

ஆனால், வடக்கு மாகாணசபைக்குத் தனியான காவல்துறை தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , , ,

Leave a Reply