காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு தெலுங்கானா பகுதி காங்கிரஸ் தலைவர்கள் கோவில் கட்டி தினமும் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மசோதா சட்டமாக மாறியதும் நிரந்தரமாக கோயில் கட்ட முடிவு செய்துள்ளனர்.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இதனால் தெலுங்கானா மாநிலம் அமையும் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிற பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கானா எதிர்ப்பாளர்கள் சில நாட்களுக்கு முன் தெலுங்கானாவுக்கு அனுமதி அளித்த காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு சமாதி கட்டினர்.
அதற்கு பதிலடியாக தெலுங்கானா பகுதி காங்கிரஸ் தலைவர்கள், சோனியாவுக்கு கோவில் கட்டியுள்ளனர்.
கரீம் நகரின், முக்கிய சாலை சந்திப்பில் முன்னாள் பிரதமர் இந்திராவுக்கு, சிலை உள்ளது. அதன் அருகில் கார்டு போர்டால், கோவில் உருவாக்கப்பட்டு அதன் உள்ளே சோனியா படம் வைக்கப்பட்டு நேற்று முன்தினம் பூஜை செய்யப்பட்டது.
அதில் காங்கிரஸ், எம்.பி., பொன்னம் பிரபாகர் உட்பட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தினமும் காலையும் மாலையும் பூஜை செய்யப்படும் என அறிவித்துள்ள காங்., தலைவர்கள், தெலுங்கானா மசோதா, பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டதும் நிரந்தர கோவில் கட்டப்படும் என அறிவித்துள்ளனர்.
















