இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தபால் அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதன் எதிரொலியாக சென்னையில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம் மற்றும் இலங்கை அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மயிலாப்பூர், மந்தைவெளி தபால் நிலையங்களில், இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தானியங்கி முத்திரை ஒட்டும் எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன.
பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தை அடுத்து, மயிலாப்பூர், மந்தைவெளி ஆகியப் பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை பொலிஸார் ஆய்வு செய்தனர்.
இதை வைத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக திராவிடர் விடுதலை கழகம் என்ற அமைப்பை சேர்ந்த உமாபதி உடனடியாக கைது செய்யப்பட்டார். மேலும் மாரி, ராவணன், மனோகரன் ஆகியோரையும் பொலிஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம் மற்றும் இலங்கை அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் எழும்பூரில் உள்ள புத்த மத கோயிலுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பாதுகாப்பை அதிகரித்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
















