சந்தோஷ் சிவன் இயக்கத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் இனம் (சிலோன்).
சில வருடங்களுக்கு முன்பே படப்பிடிப்பு தொடங்கப்பட்டாலும், தவிர்க்க முடியாத காரணங்களால் இனம் திரைப்படத்தின் பணிகள் தடைபட்டன.
துப்பாக்கி, ராம்ரீஸ் (நாடோடிகள் ஹிந்தி ரீமேக்) போன்ற மெகா பட்ஜெட் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியதால் மேலும் காலத்தாமதமாகிவிட, ஒப்பந்தமான படங்களை முடித்துவிட்டு இனம் படத்தின் மீது கவனம் செலுத்தி தற்போது முழு படத்தையும் எடுத்துமுடித்துவிட்டார் சந்தோஷ் சிவன்.
இலங்கையில் நடந்த போருடன் தொடர்புள்ள திரைப்படங்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்துவதால் சந்தோஷ் சிவனின் இனம் திரைப்படத்தின் மீது மொத்த திரையுலகத்தின் பார்வையும் இருந்தது.
ஆனால் சமீபத்தில் தணிக்கை செய்யப்பட்ட இனம் திரைப்படத்திற்கு, தணிக்கைக் குழு ´U´ சான்றிதழ் வழங்கியுள்ளது. தனது திரைப்படத்திற்கு ’U´ சான்றிதழ் கிடைத்துள்ள மகிழ்ச்சியை டுவிட்டரில் இரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார் சந்தோஷ் சிவன்.
“இனம், இலங்கையிலிருந்து அகதியாக வந்த ஒரு பெண்ணின் உண்மையான கதை. போர் முடியும் சமயத்தில் அங்கே சிக்கித்தவிக்கும் இளைஞர்களின் காதல், நட்பு, போராட்டம் ஆகியவை அடங்கிய கதை தான் இனம் (சிலோன்). உங்களின் (இரசிகர்களின்) ஆதரவுடனும், ஊக்கத்துடனும் அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் இனம் நல்லபடியாக வௌியாகும் என நாங்கள் (இனம் படக்குழு) நம்புகிறோம்” என்று கூறியிருக்கிறார்.
















