முல்லைத்தீவு நஞ்சுண்டான் குளத்தை திருத்துவதன் மூலம் அப் பகுதியில் வாழும் 1300க்கு மேற்பட்ட மக்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியும் என வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு, றெட்பானாவிற்கு தெற்குத் திசையில் அமைந்துள்ள நஞ்சுண்டான் குளத்தை திருத்துவதன் மூலம் வள்ளுவர்புரம், தேராவில், மாணிக்கபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோந்த 1300 குடும்பங்கள் பயன் பெறமுடியும். இக் குளத்தை அண்டி 6000 ஏக்கர் விவசாய நிலம் தரிசு நிலமாகவுள்ளது. முன்னைய காலங்களில் விவசாயத்திற்கு பணன்படுத்தப்பட்ட இந் நிலம் குளம் திருத்தப்படாமையால் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.
இப்பகுதி மக்கள் 1972 ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தின் போது இங்கு குடியேறியவர்களாவர். தொடர்ச்சியான போர் நடவடிக்கைகளால் பாதிப்படைந்து தற்போது தற்போது மீள் குடியேறியுள்ள நிலையில் தொழில் வாய்ப்பின்றி தமது வாழ்கையை கொண்டு நடத்த முடியாத நிலையில் உள்ளனர்.
எனவே, இக் குளத்தினை புனரமைத்தும் தரிசு நிலத்தை தொழில் நடவடிக்கைக்காக பிரித்து வழங்கியும் தமது வாழ்வாதாரத்திற்கு வழியை ஏற்படுத்தி தருமாறு அப் பகுதி மக்கள் என்னிடம் கோரிக்கை விட்டுள்ளனர். இவ் விடயம் தொடர்பில் அப்பகுதி மக்கள் உரிய அதிகாரிகளிடம் தெரியப்படுத்திய போதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனைக் கருத்தில் கொண்டு, எமது வடமாகாணசபையும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இவ் விடயத்தில் கவனம் செலுத்தி அப் பகுதி மக்கள் வாழ்வதற்கும் தொழில் செய்வதற்கும் வழியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
















