இசைப்பிரியாவின் காணொலி இராணுவச் சிப்பாயே தந்தார்; சனல் – 4 இயக்குநர் கலம் மக்ரே

isai-priyaஇசைப்பிரியா இலங்கை இராணுவத்தினரால் உயிருடன் பிடித்துச் செல்லப்படுகின்ற காணொலியை இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவரே தனக்குத் தந்தார் என சனல் – 4 இயக்குநர் கலம் மக்ரே தெரிவித்துள்ளார்.

இந்தக் காட்சிகளை ஏற்கனவே இலங்கை அரசு பார்த்திருக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியா இராணுவத்தினரால் உயிருடன் பிடித்துச் செல்லப்படும் காணொலியை சனல் – 4 ஊடகம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது. இசைப்பிரியா கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சிகளையும் கடந்த வருடம் சனல் – 4 ஊடகமே வெளியிட்டிருந்தது.

இந்தக் காட்சிகள் மற்றும் இலங்கையின் இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் இரு ஆவணப் படங்களை தயாரித்து வெளியிட்ட கலம் மக்ரேக்கு இந்தியா செல்வதற்காக நுழைவிசைவு (விஸா) மறுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு செவ்வி வழங்கியுள்ளார் கலம் மக்ரே. இதன் போது இசைப்பிரியாவின் காணொலி போலியானது என்றும் அது நாடகம் என்றும் இலங்கை அரசு மறுத்திருப்பது தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர் ‘எல்லாவற்றையும் எடுத்த எடுப்பிலேயே மறுக்கும் போக்கை இலங்கை அரசு கைவிட வேண்டும். இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த காணொலிகளை இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவர் தனது நாட்டு அரசிடம் கொடுக்காமல் எங்களிடம் கொடுத்திருக்கிறார்.

இது இலங்கை அரசு இந்தக் காட்சிகளை ஏற்கனவே பார்த்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. எல்லா காணொளிகளையும் பார்த்த பின்னர் இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கத் தவறிவிட்டதாகவே தோன்றுகின்றது. இது உண்மையில் சிக்கலான பிரச்சினை என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags: , , ,

Leave a Reply